Saturday, March 31, 2012

வில்லிபுத்துராழ்வார் பாரதம் - மாபாரதம் வாராமல் காக்க

பாரதப் போருக்கு முன், கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த போரை
எப்படி தவிர்ப்பது என்று கேட்டான்.

தருமன்: அவர்களிடம் ஐந்து நாடு கேள், கொடுக்காவிட்டால் ஐந்து ஊர் கேள்,
அதுவும் கொடுக்காவிட்டால் ஐந்து வீடு கேள், சமாதனாமாய் போய் விடுவோம் என்றான்.

அர்ஜுனன்: Nothing doing, we want war என்றான்.

பாஞ்சாலி: ஒன்றும் சொல்லவில்லை. தன் விரித்த கூந்தலை காட்டினாள். கிருஷ்ணன்
புரிந்து கொண்டான்.

சகாதேவன்: அவன் ஒரு பெரிய ஞானி. அவன் சொல்லவான் "கிருஷ்ணா, நீ இந்த போரை நடத்த
முடிவு செய்து விட்டாய்...எதற்கு எந்த நாடகம் ... "

கிருஷ்ணன்: என்ன சகாதேவா இப்படி சொல்கிறாய். இந்தப் போரை நிறுத்த முடியும்
என்றால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். இந்தப் போரை நிறுத்த
உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா ? என்று கேட்டான்.

சகாதேவன்: இருக்கு கிருஷ்ணா. கர்ணனுக்கு முடி சூட்டி, அர்ஜுனனை கொன்று,
பாஞ்சாலியை மொட்டை அடித்து, உன்னையும் கட்டி போட்டால், வாராமல் காக்கலாம் இந்த மா
பாரதப் போர் என்றான்.


கிருஷ்ணன்: ஹ்ம்ம்...மத்தது எல்லாம் செய்ய முடியும் என்றே வைத்துக்
கொள்வோம்....என்னை எப்படி கட்டி போடுவாய் என்று கேட்டான் ?

சகாதேவன்: அது ரொம்ப சுலபம்...என் அன்பால், என் பக்தியால் உன்னை கட்டிப்
போடுவேன் என்றான்.

கிருஷ்ணன்: எங்க என்னை கட்டு பார்ப்போம் என்று ஆயிரம் ஆயிரம் உருவம்
எடுத்தான்... சகாதேவன் அவனை தன் பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவா,
"ஒத்துக் கொள்கிறேன்..என்னை உன் பக்தியால் கட்டிப் போட முடியும்
என்று...தயவுசெய்து கட்டுகளை அவிழ்த்து விடு" என்றான்.


சகாதேவன்: எங்களுக்கு வெற்றி கிடைக்க அருள் புரிந்தால், கட்டை அவிழ்த்து
விடுகிறேன் என்றான்.

கிருஷ்ணனும் அப்படியே அருள் புரிய, அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.


வில்லி புத்துராழ்வார் எழுதிய பாரதத்தில் இருந்து அந்தப் பாடல்


----------------------------------------------------------------------------------------------------------------------
பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன்
கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக்
கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா
மாபாரதமென்றான்
------------------------------------------------------------------------------------------------------------------------


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்:


--------------------------------------------------------------------------------------------------------------------------
பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று
அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம்
மாபாரதம் என்றான்
---------------------------------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு
சுழி "ன்" போட்டால் கர்ணன்)

இகல் பார்த்தனை = பகைமை கொண்ட அர்ஜுனனை

முன் கொன்று = அதற்க்கு முன்னால் கொன்று

அணங்கின் = பாஞ்சாலியின்

காரார் குழல் களைந்து = கருமையான முடியை களைந்து
மொட்டை அடித்து

காலில் தளை பூட்டி = காலில் விலங்கு பூட்டி
நேராகக் கைப் பிடித்து = உன் கைகளையும் பிடித்து

நின்னையும் யான் கட்டுவனேல் = உன்னையும் நான்
கட்டினால்
வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் = இந்த மா
பாரதப் போர் வராமல் காக்கலாம் என்றான்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் மாணிக்க வாசகர்.

இறைவன் அன்புக்கு கட்டுப் படுபவன்.

கம்ப இராமாயணம் அளவுக்கு புகழ் பெறாவிட்டாலும், வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ரொம்ப அருமையான
பாடல்களை கொண்டது. படிக்க கொஞ்சம் கஷ்டம்.

கம்ப இராமாயணம் அளவுக்கு எளிமை அல்ல.

அதுவும் காரணமாய் இருக்கலாம்.

No comments:

Post a Comment