Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - இலங்கை வர்ணனை




வருணனை என்பது சற்று கடினமான காரியம்.

வாசகன் எளிதாக skip பண்ணக்கூடிய இடம் வருணனை. அதையும் தாண்டி, வாசகனை, அந்த வருணனையை படிக்க, இரசிக்க வைக்க வேண்டும் என்றால் ரொம்ப மெனக்கடனும்.

அதுவும், ஒரு ஊரைப் பற்றி வருணனை என்றால் இன்னும் கஷ்டம்.

ஒரு அழாகான பெண், அல்லது ஆண் என்றால் படிப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் இயற்கையாக இருக்கும்.

ஊரை பற்றி என்ன எழுத முடியும் ?


கம்பன் வர்ணிக்கும் ஒவ்வொரு இடமும் அத்தனை அருமை. அடடா என்று நம் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் இடங்கள்.

கம்பனின் வருணனைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்.


அனுமன் முதன் முதாலாய் இலங்கைக்குள் நுழைகிறான். இலங்கை எப்படி இருக்கிறது ?


மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் என்று நாம் எழுதுவோம். கம்பன் என்ன சொல்கிறான்.




அங்கு உள்ள மாளிகைகள் எல்லாம் மிக உயரமாக இருக்கின்றன.

உயரம் என்றால் எவ்வளவு ? ஒரு நூறு அடி இருக்குமா

இல்லை, நிலா வந்து முட்டுமாம்.

அவ்வளவு உயரம். அந்த மாளிகைகளின் சாளரங்களில் மேகங்கள் வந்து போகுமாம். அந்த மாளிகைகள் மின்னுகின்றன

ஒரு வேளை தங்கத்தால் செய்தவையோ ? இருக்காது. 

தங்கம் இவ்வளவு பிரகாசமாய் இருக்காது. ஒரு வேளை வைரம், வைடூரியம் போன்ற பிரகாசமான கற்களை கொண்டு செய்து இருப்பார்களோ

இல்லையே. அப்படி தெரியலேயே. பின்ன சூரிய ஒளியால் செய்ததாய் இருக்குமோ

அப்படியும் தெரியலையே. ம்ம்ம்...ஒரு வேளை மின்னலை கொண்டு செய்து இருப்பார்களோ ?


இப்படி எதில் செய்தது என்று தெரியாமல் கம்பன் தவிக்கிறான்.

---------------------------------------------------------------------------------------------------
பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டுஅமைத்த ? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டுஇயற்றிய எனத்தெரிவு இலாத-
வன்கொண்டல்விட்டுமதி முட்டுவன மாடம்
--------------------------------------------------------------------------------------------------

பொன்கொண்டு இழைத்த? = பொன்னால் இழைத்ததோ


மணியைக் கொடு பொதிந்த? = வைரம் வைடூரியம் போன்ற மணிகளால் செய்ததோ

மின்கொண்டுஅமைத்த ? = மின்னலை கொண்டு செய்ததா ?


வெயிலைக்கொடு சமைத்த? = சூரிய ஒளியால் செய்ததா ?


என்கொண்டுஇயற்றிய எனத்தெரிவு இலாத- = எதால் செய்தது என்று தெரியாத

வன்கொண்டல் = வன்மையான மேகங்கள் (கொண்டல் = மேகம்)


விட்டுமதி முட்டுவன மாடம் = நிலா முட்டும் மாடங்கள்


கடைசி வரியை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். "விட்டு மதி முட்டு வன மாடம்"...என்ன ஒரு rhym ....


கவிச் சக்ரவர்த்தி என்றால் சும்மாவா ?

No comments:

Post a Comment