Sunday, April 29, 2012

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும். 

பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம். 

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.

இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்



அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

ரொம்ப எளிய பாடல்.

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.

இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று, இன்னும் உன் திரு உருவை காண்கிலேன்.

மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால், உன் திரு உருவத்தை தனியாகக் காணேன்

என்னிடம், "உன்னுடைய பிரான் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.

(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)


1500 + ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ். ஏதோ நேற்று எழுதியது போல இருப்பது ஆச்சரியம்.




4 comments:

  1. மிகவும் உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்! இதை எஙகளுக்கு அளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரைக்கால் அம்மையாருக்கு. அதிகம் பேசப்படாத அவரின் பாடல்களை நான்கு பேர் அறியச் சொன்னதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்

      Delete
  2. மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால், உன் திரு உருவத்தை தனியாகக் காணேன்-

    Narration மிக அழகு.

    ReplyDelete
  3. தமிழ் இலக்கணத்தில் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தெய்வீக அம்மை காரைக்கால் அம்மையார். அவரது அந்தாதி பாடல்கள் அற்புதம்!அற்புதம்" எனவே 'அற்புதத்திருவந்தாதி'. ஞான அனுபவிகட்கு இது தேன் போன்றது.

    ReplyDelete