Thursday, April 5, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஆண்டாள் - சின்ன வளை


ஏன் நினைவா நான் உனக்கு ஒண்ணு தருவேன், அத பத்திரமா வச்சுகுவியா ?

அவன்: நீ தந்து அதை நான் தொலைப்பேனா
? சொல்லு என்ன அது ?

அவள்: நீ சொல்லு பாப்போம் ?

அவன்: ம்ம்...பேனா ?

அவள்: இல்லை...

அவன்:ம்ம்ம்..வாட்ச் ?

அவள்: இல்ல

அவன்: கொலுசு ?

அவள்: இல்ல...

அவன்: தெரியல சொல்லு...

அவள்: என்னோட வளையலை தர்றேன்... பத்திரமா வச்சுகுவியா ?

அந்த அவள் "ஆண்டாள்", அந்த அவன் "திருவரங்கத்து பெருமான்". அவன் கேட்கவில்லை.

அவள் கூறுகிறாள்.

-------------------------------------------------------------------
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
------------------------------------------------------------------------

அந்த காலத்தில் வாமனனாகி வந்து மூன்றடி கேட்டு, அது முற்றும் கிடைக்காமல்,
குறையாகி, இப்போ தெருவில் போகும் போது என் வளையலை ஆசையோடு பார்கிறாரே என்று புன் முறுவல் பூக்கிறாள் ஆண்டாள்....

--------------------------------------------------------------
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சை குறை ஆகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை உடையறேல் இத் தெருவே போதாரோ ?
----------------------------------------------------------------

பதம் பிரித்த பின் புரியுதா ?


மச்சு = மாடி


அணி = சிறப்பான அணிகலன்களை அணிந்த


மாட மதிள் = அந்த மாளிகைகளில் மணிகள், விலை உயர்ந்த
கற்கள் பதிக்கப் பெற்று இருக்கின்றன


வாமனனார் = வாமன அவதாரம் கொண்டவர்


பச்சை பசும் தேவர் = பசுமையான நிறம் கொண்ட அந்த
திருமால்


தாம் = அவர்


பண்டு = முன்பு (பண்டைய காலம் என்று சொல்வது இல்லையா
)


நீர் ஏற்ற = யாசிப்பதர்க்காக நீர் ஏற்ற


பிச்சை குறை ஆகி = பிச்சை குறை ஆகி. என்ன குறை ?

கேட்டது மாவலியிடம் மூன்று அடி. ஒரு அடியால் பூலோகம் முழுதும் அளந்தார்.
பூலோகம் முழுதும் மாவலியிடம் இல்லை. அவரிடம் இல்லாததை எப்படி இவர் அளந்து எடுத்துக்கொள்ள முடியும். சரி, அதுதான் போகுதுன்னு பாத்தா அடுத்த அடியில் வானுலகம் முழுதும் அளந்தார். அது மாவலியின் இடம் இல்லை.

இப்படி , அந்த பிச்சை குறை ஆகிப் போனது.


என்னுடைய பெய் வளை மேல் = அதனால், என்னுடைய வளையல்
மேல்


இச்சை உடையறேல் = போன பிச்சை தான் சரியா கிடைக்கலை, என்னவோ குறை இருக்கிறது இருக்கிறது எண்று நினைத்து, அதை சரி செய்ய என்னுடைய வளையல் மேல் ஆசை வைத்து தான்


தெருவே போதாரோ ? = இந்த தெரு வழியாகப் போகிறாரோ
என்று அரங்கன் வீதி உலா போனபோது அதை கண்டு ஆண்டாள் பாடுகிறாள்.

அவனுக்கு என் வளையல் மேல் ஆசை , அதுக்காகத்தான் இந்த
தெரு வழியாக அடிக்கடி வருகிறான் என்கிறாள்.


திருவரங்க திவ்ய
தேசத்தை ஆண்டாள் மங்களாசாசனம் செய்த 610 ஆவது பாசுரம்.

No comments:

Post a Comment