Tuesday, April 17, 2012

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர


திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார். 

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார். 

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில். 

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...


------------------------------------------------------------
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே.
---------------------------------------------------------------


பொருள்:




சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான


வேதியன் = வேதங்களுக்கு தலைவனான 


சோதி = சோதி வடிவாய் உள்ளவன்


வானவன் = வானத்தில் உள்ளவன்


பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள
திருந்தடி = திருவடி


பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி


கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது


 நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே



கல்லை கட்டிப் போட்டாலும் அவன் நாமம் துணையாய் இருக்கும். அவ்வளவுதானா? எழுதியது நாவுக்கரசர்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் சில பொருள் விளங்கும்:

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். 

இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி எப்படி நீந்துவது. 

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும். 

எழுதியது நாவுக்கரசர் !




1 comment:

  1. "பிறவிப் பெருங் கடல் நீந்துவார் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்"

    ReplyDelete