Sunday, April 15, 2012

கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


இராமன் முடி சூட வருகிறான்.

பட்டத்து இளவரசன்.

அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

கைகேயியை பார்க்கிறான்.

அவள் அவனை கானகம் போகச் சொல்லுகிறாள்.

சொன்ன அந்த கணத்தில் இராமனுக்கு எப்படி இருந்திருக்கும் ?

ஒரு வினாடி திகைதிருப்பானா ? பின் சுதாரித்து இருப்பானோ ?

ஒரு துளியாவது வருத்தம் இருந்திருக்குமா ? நான் ஏன் காட்டுக்குப் போக வேண்டும் என்று கேட்டு இருப்பானா ?

ஒரு வினாடி இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கம்பனைத் தவிர யாராலும் அந்த இடத்தை இவ்வளவு அழகாக சொல்லி இருக்க முடியாது.
.
இராமனின் முகம் அவள் சொன்னதை கேட்பதற்கு முன்னும், கேட்ட பின்னும் தாமரை மலர் மாதிரி இருந்ததாம், கேட்ட அந்த ஒரு வினாடி தாமரை அந்த நொடியில் மலர்ந்த மாதிரி இருந்ததாம்.


-----------------------------------------------
இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

---------------------------------------------------

இப் பொழுது = இப்போது, அது நடந்து முடிந்த எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், ஆற அமர யோசித்து இப்போது

எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? = எம் போன்ற கவின்ஞர்களுக்கு சொல்லுவது எளிதா ? இல்லவே இல்லை.

யாரும் செப்ப அருங் குணத்து இராமன் = யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த குணங்களை கொண்ட இராமனின்

திருமுகச் செவ்வி நோக்கின் = செம்மையான திரு முகத்தை நோக்கினால்

ஒப்பதே முன்பு பின்பு = அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னும் பின்னும் தாமரையை ஒத்து இருந்தது

அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது = ஆனால் அந்த வாசகத்தை கேட்ட அந்த ஒரு கணத்தில்


அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! = அப்போது தான் மலர்ந்த செந்தாமரையை மிஞ்சி நின்றது அவன் முகம்



அந்த வாசகத்தை கேட்ட உடனே, முகம் மலர்ந்ததாம். மலர்ந்த செந்தாமரையை விட இன்னும் சிறப்பாக இருந்ததாம்.


1 comment:

  1. Yes, it is Kaikeyi who tells him the king's decision. It is an amazing point that Rama's emotions didn't change a bit when he heard it.

    ReplyDelete