Sunday, April 15, 2012

கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்


கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்



இராமன், இராவணனை கொன்றபின், சீதையை சிறை மீட்டு வரும் வழியில் வானுலகில்  இருந்து தசரதன் வருகிறான்.

இராமனை கட்டி அணைக்கிறான்.

அப்போது சொல்கிறான் "இராமா,  அன்று கைகேயி கேட்ட கொடிய வரம் என் மனத்தில் வேல் போல் குத்தி நின்றது.

இன்று உன்னை தழுவிய போது உன் மார்பு என்ற காந்தத்தால் அது இழுக்கப்பட்டு வெளியே வந்து  விட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறான்.
 .
 இராமனும் இரண்டு வரம் கேட்கிறான்.
 .
 "நீ தீ எனத் துறந்த கைகேயியும் , பரதனையும் உன் மனைவி, மகன் என்று நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று வரம் கேட்கிறான்.
 .

 ----------------------------------------------------------------------------------
 ’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’   என, அழகன்
 ”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
 தாயும் தம்பியும் ஆம்  வரம் தருகஎனத் தாழ்ந்தான்
 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம்  வழுத்தி
 --------------------------------------------------------------------------------
 
 ஆயினும் = ஆனாலும்
 

 
 உனக்கு அமைந்தது ஒன்று உரை = உனக்கு
 வேண்டியது ஒன்று கேள் என்று தசரதன் இராமனிடம் சொன்னான்.

 
 என, அழகன் = அப்படி சொன்ன உடன், அழகனான இராமன்

 தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் = தீயவள் என்று நீ துறந்த என்
 தெய்வமும் (கைகேயியும்)
 

 மகனும் = மகனாகிய பரதனும்


 தாயும்  தம்பியும் = தாயும், தம்பியும்
 

 ஆம் வரம் தருகஎனத் தாழ்ந்தான் =

ஆகும் வரம் தருக என்று தசரதன் அடி பணிந்து நின்றான்
 

 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர்
 எலாம் வழுத்தி = அப்படி கேட்டவுடன், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாய் திறந்து இராமன் வாழ்த்தி ஆராவாரம் செய்தன.
 

 ஆர்த்தல் என்றால் ஆரவாரம் செய்தல், நிறைத்தல்
 என்று பொருள்
 

 எவ்வளவு கருணை இருந்தால் இந்த வரம் கேட்கத்  தோன்றும்.

கைகேயியால் பட்ட துன்பம் கொஞ்சம் அல்ல.

பதினாலு வருடம் காட்டில் கஷ்டப்   பட்டான் இராமன்.

மனைவியை பிரிந்தான்.

இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமான கைகேயியை "என்  தெய்வம்" என்கிறான்.

 நினைத்துக் கூட பார்க்க முடியாத கருணை  உள்ளம்.

No comments:

Post a Comment