Wednesday, May 16, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்னமோ ஆயிருச்சு



நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்னமோ ஆயிருச்சு

இவளுக்கு என்ன ஆச்சு? 
அடிக்கடி பட்டு புடவையை மாற்றுகிறாள்...

அப்பப்ப கண்ணாடி முன்னால் போய் நின்னு அழகு பார்க்கிறாள்.

தன கையில் உள்ள வளையல்களை தானே குலுக்கி குலுக்கி சப்தம் உண்டாக்குகிறாள்.


ரொம்ப பெரு மூச்சு விடுகிறாள்.

போதாகுறைக்கு இந்த lip stick -a வேற அப்பப்ப சரி பண்ணுகிறாள்

யார் பேரையோ அடிக்கடி முணுமுணுக்கிறாள்... இவளுக்கு என்னோவோ ஆய்ருச்சு...
அப்படின்னு நம்மாழ்வார் அங்கலாய்கிறார் , தன் மகளை பார்த்து ..
தேன் சொட்டும் அந்த பாடல்

காறை பூணும் கண்ணாடி காணும் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் கொவ்வை செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே


காறை பூணும் = கழுத்துக்கு ஆபரணங்களை இட்டுக் கொள்வாள்

கண்ணாடி காணும் = அது நல்லா இருக்கானு கண்ணாடியில் பார்த்துக் கொள்வாள்

கையில் வளை குலுக்கும் = கையில் உள்ள வளையல்களை குலுக்கி சந்தோஷப் படுவாள்

கூறை உடுக்கும் = பட்டுப் புடவையையை அணிந்து கொள்வாள்

அயர்க்கும் = (அவன் வராததை கண்டு) சோர்ந்து போவாள்

கொவ்வை செவ்வாய் திருத்தும் = சிவந்த இதழ்களை இன்னும் சரி பண்ணுவாள்

தேறி தேறி நின்று = மிகத் தெளிந்து நின்று

ஆயிரம் பேர் = சஹஸ்ர நாமம் கொண்ட

தேவன் திறம் பிதற்றும் = தேவனுடைய (திருமால்) திறமையையை பற்றி பேசுவாள்

மாறில் = மாறு + இல் = மாறுதல் இல்லாத

மாமணி வண்ணன் = சிறந்த மணி வண்ணன்

மேல் இவள் மாலுருகின்றாளே = மேல் இவள் மையல் கொண்டாளே





1 comment:

  1. உண்மையிலேயே தேன் சொட்டுகிறது.

    ReplyDelete