Thursday, May 17, 2012

பழமொழி - பயந்தவனுக்கு இல்லை பாதுகாப்பு


பழமொழி - பயந்தவனுக்கு இல்லை பாதுகாப்பு

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் துணை இருந்தாலும் - வீடு, மனைவி, சொத்து, நண்பர்கள், வேலை - மனதில் thairiyamum உறுதியும் இல்லாவிட்டால் அந்த மனிதனுக்கு எந்த துணையாலும் பிரயோஜனம் இல்லை.

மன வலிமையே மிகப் பெரிய வலிமை.

அதை சொல்கிறது இந்தப் பாடல்....



வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க் கில்லை யரண்.

கொஞ்சம் பதம் பிரித்தால் எளிதாகப் புரியும்..

வன் சார்பு உடையவர் எனினும் வலி பெய்து
தன் சார்பு இல்லாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ
மஞ்சு சூழ் சோலை மலை நாட! யாருக்காக வேணும்
அஞ்சுவார்க்கு இல்லை அரண்

வன் சார்பு = வலிமையான துணை

உடையவர் எனினும் = உடையவர் என்றாலும்

வலி பெய்து = வலிமை உண்டாக்கி

தன் சார்பு இல்லாதாரை = தன்னம்பிக்கை இல்லாதாரை

தேசு = அழகு, புகழ், சிறப்பு

ஊன்றல் ஆகுமோ = உண்டாக்க முடியுமா

மஞ்சு சூழ் = மேகங்கள் சூழ்ந்த

சோலை மலை நாட! = சோலைகள் சூழ்ந்த மலை நாட்டை உடையவனே

யாருக்காக வேணும் = யாருக்கு என்றாலும்

அஞ்சுவார்க்கு இல்லை அரண் = பயப்படுபவர்களுக்கு இல்லை பாதுகாப்பு அரண்.

அஞ்சுவார்க்கு இல்லை அரண் என்பது பழமொழி







1 comment:

  1. "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete