Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...



மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே


மாலோன் மருகனை = மாலோன், விஷ்ணுவின், மருமகனே

மன்றாடி மைந்தனை = மன்றாடி = மன்றத்தில் + ஆடி.. அம்பலத்தில் ஆடும் சிவனின் மகனை

வானவர்க்கு மேலான தேவனை = தேவர்களுக்கு எல்லாம் மேலான தெய்வத்தை

மெய்ஞான தெய்வத்தை = உண்மையான ஞான குருவை

மேதினியிற் = உலகத்தில்

சேலார் வயற்பொழிற் = செல் என்றால் மீன். மீன்கள் துள்ளி விளையாடும் வயல்களை கொண்ட

செங்கோடனைச் = திருச்செந்தூரில் வாழ்பவனை

சென்று கண்டு தொழ = சென்று, கண்டு, தொழ

நலாயிரம் = நான்கு ஆயிரம். நான்கு என்றால் நிறைய என்று பொருள்.

நாலு பேரு வாழ்த்தும் படியா வாழனும் என்றால், நிறைய பேரு வாழ்த்த என்று அர்த்தம்.

கண் படைத்திலனே இந்த நான்முகனே = கண்களை தரவில்லையே அந்த நான்முகக் கடவுளான பிரமன்.




3 comments:

  1. மிக இனிமையான பாடல். அருனகிரியின் ஆதங்கத்தை உணர முடிகிறது.

    நல்ல எளிமையான, சுவாரசியமான விளக்கம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருணகிரி நாதரின் பாடல்களை படித்து இரசிக்க நிறைய பொறுமையும் ரசனையும் வேண்டும். கொஞ்சம் கரடு முரடான பாடல்கள். பதம் பிரிப்பது ஒரு வேலை. பதம் பிரித்து விட்டால், பலாப் பழம் மாதிரி...ஒரே இனிப்பு தான்.

      Delete
  2. Dear Sir,
    This poem is about Thiruchengode not Thirucendhur. Arunagiri always refers to Thiruchendur as Senthil and not Sengodu. Further, Thiruchendur is Neythal nilam not marutha nilam. So no vayal in Chendur.. Just wanted to point out. Amazing blog.. I would also like to send you some nice poetry I come across.. How can I contact you?

    Thanks...

    ReplyDelete