Thursday, July 19, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே

சீர் பிரித்த பின் 

செஞ் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய் மின் திருமாலிருஞ்சோலை 
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் 
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே 

பொருள்

செஞ் சொல் = செம்மையான சொற்களை சேர்த்து கவி பாடும்

கவிகாள் = கவிஞர்களே

உயிர் = உங்கள் உயிரை

காத்து ஆட் செய் மின் = பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்


திருமாலிருஞ்சோலை = திருமாலிருஞ்சோலை என்ற ஊரில் உள்ள

வஞ்சக் கள்வன் = வஞ்சகமான கள்வன்

மாமாயன் = பெரிய மாயக் காரன்

மாயக் கவியாய்  வந்து = மாயமான கவியாய் வந்து

என் = என்னுடைய

நெஞ்சும் = மனத்திலும்

உயிரும் =  உயிரிலும்

உள் கலந்து = ஒன்றாகக் கலந்து

நின்றார் = பக்கத்தில் இருப்பவர்கள் கூட

அறியா வண்ணம் = அறியா வண்ணம்

என் = என்னுடைய

நெஞ்சும் உயிரும் = மனதையும், உயிரையும்

அவை உண்டு = உண்டு

 தானே ஆகி நிறைந்தானே  = அவனே என் மனமும் உயிருமாய் நிறைந்து 
நின்றான்

வாசித்து வாசித்து இன்புறத் தக்க பாசுரம். என்ன ஒரு இனிமையான பாசுரம்....

1 comment:

  1. தானே ஆகி நிறைந்தானே -What a word!!!Excellent Pasuram.Read long before.

    ReplyDelete