Monday, August 20, 2012

தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள்


தனிப் பாடல் - நெஞ்சை விட்டு போகாதவள் 


அவர்கள் காதலர்கள். இன்னும் பேசிக் கொள்ளவில்லை. எல்லாம் கண் ஜாடை தான்.

அவள் போகும் இடம் எல்லாம் அவனும் போகிறான். அவள் கண் படும்படி நிற்கிறான்.
 
அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவள் மனத்திலும் அவன் மேல் சினாதாய் ஒரு காதல் துளிர் விடுகிறது. 

ஒரு நாள் அவள் கோவிலுக்குப் போகிறாள். அவனும் வழக்கம் போல் அவளை தொடர்ந்து போகிறான்.
 
கோவில் வாசல் வந்து விட்டது.

அவனுக்கு கண் காட்டுகிறாள்....""இங்கேயே இரு, வந்து விடுகிறேன்" என்று கண் ஜாடை காட்டி விட்டுப் போகிறாள்.

அவள் கண்ணை விட்டுப் போய் விட்டாள்...நெஞ்சை விட்டுப் போகவில்லை....
 

இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையும் பாரித்து
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லென்று போனாரென் நெஞ்சைவிட்டுப் போகாரே

சீர் பிர்த்தபின்
இல்  என்பார்  தாம் அவரை யாம் அவர் தம் பேர் அறியோம்
பல் என்று செவ் ஆம்பல் முல்லையும் பாரித்து
கொல் என்று காமனையும் கண் காட்டி கோபுரக் கீழ்
நில் என்று போனார் என் நெஞ்சை விட்டு போகாரே 

பொருள்:

இல்  என்பார் = அவள் வீடு (இல்லம்) தெரியும் 

தாம் அவரை  யாம் அவர் தம் பேர் அறியோம் = அவளோட பேர் கூட தெரியாது 

பல் என்று = அவளுடைய பல்

செவ் ஆம்பல் = செம்மையான ஆம்பல்

முல்லையும் = முல்லை மலரையும் சேர்த்து

பாரித்து = கட்டி வைத்தது மாதிரி இருக்கிறது

கொல் என்று = என்னை கொல் என்று

காமனையும்  கண் காட்டி = மன்மதனிடம் கண்ணை காட்டிவிட்டு 

கோபுரக் கீழ் = கோவில் வாசலில் , கோபுரத்தின் கீழ்

நில் என்று போனார் = நில் என்று சொல்லிவிட்டு போனாள்

என் நெஞ்சை விட்டு போகாரே  = என் நெஞ்சை விட்டு போகவில்லை 


1 comment:

  1. இது என்னப்ப்பா அன்னியாயபமாக இருக்கிறது! நாங்கள் எல்லாம் கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போவோம்!

    என்ன அருமயான பாடல். உதட்டில் உடனே புன்னகையை வரவழைக்கிறது.

    ReplyDelete