Sunday, August 5, 2012

அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி அந்தாதி - எல்லா துன்பங்களும் விலக


அபிராமி பட்டருக்கு அபிராமியின் மேல் உள்ளது பக்தியா  காதலா என்று இனம் பிரித்து சொல்வது கடினம்.

அபிராமி ஒரு கடவுள் என்பதை மறந்து, ஏதோ ஒரு காதலியிடம் பேசுவது போல் இருக்கிறது அவரின் பாடல்கள்.

"நான் பார்க்கும் இடம் எல்லாம், அபிராமி, உன் பாசாங்குசமும், உன் மேனியில்உள்ள புது மலர்களும், உன் கையில் உள்ள கரும்பும், என் துன்பம் எல்லாம் தீர்க்கும் உன் அழகிய மேனியும், உன் சிறிய இடையும், குங்குமம் தாதன் உன் மார்பும், அதன் மேல் தவழும் முத்து மாலையுமே" என்று பார்க்கும் இடம் தோறும் அவளையே பார்த்தார் அபிராமி பட்டர்.

இந்த அளவுக்கு ஒரு பெண் தெய்வத்தை யாரும் இரசித்து இரசித்து தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்யோன்யியம்....


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே


பார்க்கும் திசைதொறும் = நான் பார்க்கின்ற திசைகள் எல்லாம்

பாசாங்குசமும் = உன் பாசாங்குசமும்

பனிச்சிறை வண்டு = பனியை போல் மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள்

ஆர்க்கும் = ஆர்பரிக்கும், ஆவலோடு வரும்

புதுமலர் ஐந்தும், = ஐந்து விதமான மலர்களும்

கரும்பும் = உன் கையில் உள்ள கரும்பும்

என் அல்லல் எல்லாம் = என்னுடைய துன்பங்கள் எல்லாம்

தீர்க்கும் = தீர்த்து வைக்கும்

திரிபுரையாள் = மூன்று புரங்களை வென்ற சிவனின் பாதியை கொண்டாதால், திரிபுர சுந்தரி, உன்னுடைய

திருமேனியும் = அழகிய திருமேனியும்

சிற்றிடையும், = சின்ன இடையும்

வார்க்குங்கும முலையும், = குங்குமம் வார்த்த முலையும்

முலைமேல் = அந்த முலையின் மேல்

முத்துமாலையுமே = தவழும் முத்து மாலையுமே....

பக்தியா ? காதாலா ? சிருங்காரமா ?


1 comment:

  1. Once I asked you whey you liked Abhirami Andhathi. You said it is because of the feeling of intimacy that pervades the poems. This is a very good example of that. Thanks for sharing.

    ReplyDelete