Thursday, October 25, 2012

கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்


கம்ப இராமாயணம் - சீதையின் கானகப் பயணம்

அது ஒரு jungle resort . நீங்கள் உங்கள் மனம் கவர்ந்தவளோடு வந்து இருக்கிறீர்கள். காலையில், இருவரும் சிற்றுண்டி உண்டு விட்டு, அப்படியே ஒரு நடை போகலாம் என்று கிளம்புகிறீர்கள். 

நீங்களும், அவளும் மட்டும். யாரும் இல்லாத கானகம். அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டே வருகிறாள். அவள் குரலைத் தவிர வேறு வேறு யார் குரலும் அக்கம் பக்கத்தில் இல்லை.   

"அட டா, எவ்வளவு இனிமையானவள் இவள். கண்ணு என்ன ஒரு அழகு. அவள் குரல் அதை விட அழகு" என்று அவளின் அழகை ரசிக்கிறீர்கள்.

ஈரித்த அடர்ந்த கானகம். ஒரு பக்கம் மூங்கில் நீண்டு வளர்ந்து இருக்கிறது. அதில் வண்டுகள் இட்ட துளையில் காற்று நுழைந்து இனிய புல்லாங்குழல் இசை பிறக்கிறது. உங்களவளின் குரல், அப்படி புல்லாங்குழலில்  இருந்து பிறக்கும் இசையும், நரம்புகளை கட்டி இசைக்கும் யாழ் போன்ற கருவிகளின் இசையும் போல் இனிமையாக இருக்கிறது.

அவளின் சமீபம் தேனைப் போல, சர்கரை பாகு போல் தித்திக்கிறது  உங்களுக்கு. அங்கே மரக் கிளைகளில் கிளிகள் கீச் கீச்சென்று சப்த்தம் உண்டாக்குகின்றன. அந்த கிளி மொழி உங்கள் காதலியின்  பேச்சு போல் இருக்கிறது. தூரத்தில், கிராமத்தில் உழவர்கள் தங்கள் வயலில் பூத்து இருந்த குவளை மலர்களை பறித்து வரப்போரம் போடுகிறார்கள். அந்த குவளை மலர், அவளின் கண் போல தோன்றுகிறது உங்களுக்கு.  

அப்படித்தான் இராமனுக்கு தோன்றியது, சீதையுடன் கானகம் போனபோது.
 
பாடல் 


தொளை கட்டிய கிளை முட்டிய
     சுருதிச் சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர்
     இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழு
     கிளவிக் கிளி விழிபோல்,
களை கட்டவர் தளை விட்டு எறி
     குவளைத் தொகை கண்டான்.

பொருள் 

தொளை கட்டிய = துளை உண்டாக்கிய

கிளை = மூங்கில் கிளைகளில்

முட்டிய = முட்டிய காற்றானது 

சுருதிச் = உண்டாக்கிய இசையின்

சுவை = சுவையானது

அமுதின் = அமுதம் போல் 

கிளை கட்டிய = கிளைகள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்வதைப் போல் பின்னிய நரம்பு

கருவிக் = யாழ், வீணை போன்ற கருவிகளின்

கிளர்  இசையின்,= கிளர்ந்து எழுகின்ற இசையும்

பசை நறவின்,= பசை போல் ஒட்டும் தேனில் இருந்து 

விளை கட்டியின் = விளைந்த கட்டியான 

மதுரித்து = மதுரமும், இனிமையும்

எழு கிளவிக் = இனிமையாக மொழி பேசும் (கிளவி = மொழி, வார்த்தை)

கிளி = கிளியின்

விழிபோல் = விழிகளைப் போல்

களை கட்டவர் = களை எடுக்கும் உழவர்கள்

தளை விட்டு எறி = நிலத்தில் இருந்து பிடுங்கி எறிந்த

குவளைத் = குவளை மலர்களை 

தொகை கண்டான். = மொத்தமாகக் கண்டான்

2 comments:

  1. இதில் பாட்டு அர்த்தம் பின்னணி எல்லாத்தையும் விட அந்த சந்தம் ரொம்ப அருமையா இருக்கு. அதிலும் இடையில் வரும் மெய் எழுத்துக்கள் கொடுக்கும் அழுத்தம் சுகம். சததமா பாடினால் ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் ஆபீசில் அப்படி பண்ணினால் எநனை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

    ஒரு காலத்தில் அதாவது பட்டி மன்றம் உயிரோடு இருந்த காலத்தில் கம்ப ராமாயணத்தில் விஞ்சி நிற்பது பொருள் அழகா, சொல் அழகா, சந்த அழகா என்றெல்லாம் நடந்த விவாதங்கள் நினைவுக்கு வருகிறது.

    we want more please.

    ReplyDelete
  2. சும்மா சினிமா பார்ப்பது மாதிரி, காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறது உன் விளக்கம். தூள்!

    ReplyDelete