Wednesday, December 19, 2012

திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்


திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்

இது மார்கழி மாதம். மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பற்றி சிந்திக்க உகந்த மாதம்.


ஏதோ ஒரு காரியம் வேண்டி ஒருவரை பார்க்க போகிறோம். நமக்கு அவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருப்பதால், அவரை பற்றி கொஞ்சம் புகழ்ந்து பேசுகிறோம். அப்படி பேசும் போது நமக்குள் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்யும். ஒரு கூச்சம் இருக்கும்.

நாம் இறைவனை தொழும்போதும் ஏதோ ஒரு காரியத்திற்காகத்தான் தொழுகிறோம். அது அவனுக்கும் தெரியும். அவன் நம்மை பார்த்து புன்முறுவல் பூக்கிறான். நமக்கே ஒரு சின்ன வெட்கம் பிறக்கிறது.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்  பாதம் 

நிறைய பேர் இறைவனைப் பற்றி நிறைய புத்தகங்களைப் படிப்பார்கள், வேதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என்று...மனதிற்குள் அன்பு , கருணை, இருக்காது. மற்ற உயிர்களை தன் உயிர் போல் நினைக்கும் நேசம் இருக்காது. உலகம் எப்படி போனால் என்ன, நமக்கு வேண்டியது உணவு, உறக்கம், சுகம் என்று இருப்பார்கள்.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம் 
பேசும் போது 
இப்போது போதார் அமளிக்கே நேசமும் வைத்தாய்

இறைவன் இருக்கிறானா, இல்லையா ? இருந்தால் அவனை காண்பி...அவன் இருந்தால் ஏன் இதை இப்படிச் செய்யவில்லை, அதை அப்படி செய்யவில்லை என்று கால காலமாய் ஆத்திகர்களும் நாத்திகர்களும் யார் சொல்வது சரி என்று சண்டை இட்டுக் கொண்டிருகிறார்கள். இப்படி சண்டை போட நேரம் இதுவல்ல. நமக்கு நிறைய நேரம் இல்லை. வாழ்நாள் வேகமாக முடிந்து கொண்டே இருக்கிறது. அவன், தன் அருளை, நமக்குத் தர காத்திருக்கிறான். நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு விளையாடி கொண்டிருக்கிறோம். இவற்றை விட்டு விட்டு அவனிடம் நேரே போனால் அவன் அருள் கிடைக்கும்.

இவையும் சிலவோ, விளையாடி ஏசும் இடம் இதுவோ 
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர் பாதம் 
தந்து அருள வந்து அருளும் 

அப்படியா? அவன் எங்கே இருக்கிறான் ? எங்கு போனால் அவன் அருள் கிடைக்கும். அவன் விலாசம் என்ன ? அதை தானையா இத்தனை நாள் தேடிக் கொண்டிருக்கிறோம்.....அவன் தேசம் தேசமாக சுற்றி கொண்டிருப்பவன், எல்லா தேசத்திலும் இருப்பவன், சிவ லோகத்தில் இருப்பவன். அப்படி அவனை உங்களால் எல்லா இடத்திலும் அவனைக் காண முடியவில்லையா ? சிவ லோகம் போக முடியாதா ? பரவாயில்லை, இதோ இங்கே தில்லை சிற்றம்பலத்தில் இருக்கிறான்.

ஒரு எச்சரிக்கை, அவனிடம் போகும் முன்னால். அவனிடம் போய் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றால் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். நீங்கள் யார், அவன் யார், நீங்கள் அவன் மேல் வைத்த அன்பு எது என்று ஒன்றும் தெரியாது எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் மறைந்து போய் விடும்....

ஈசனார்க்கு அன்பு யார், யாம் யார் 

பாடல்




பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.



பொருள்

பாசம் = அன்பு

பரஞ்சோதிக் கென்பாய் = பரம ஜோதியான அவனுக்கென்பாய், (எப்போது ?)

இராப்பகல் = இரவும் பகலும்

நாம் = நாம் எல்லாம்

பேசும்போ தெப்போதிப் = பேசும் போது. இப்போதோ

போதார் = மலர்கள் நிறைந்த

அமளிக்கே = படுக்கைக்கே

நேசமும் வைத்தனையோ = நேசமும் வைத்தனையோ. தூக்கம் அவ்வளவு பிடித்திருக்கிறதா ? உடல் அசந்து தூங்கலாம். சுகத்திற்க்காக தூங்குவது ?

நேரிழையாய் நேரிழையீர் = அணிகலன்களை அணிந்த பெண்களே

சீசி = சீ சீ

இவையுஞ் சிலவோ = எது எல்லாம் ஒரு பெரிய விஷயமா

விளையாடி = உலக விஷயங்களில் திளைத்து

ஏசு மிடம்ஈதோ = நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் இடம் எதுவா ? (நேரம் இதுவா ?)

விண்ணோர்கள் = வானில் உள்ள விண்ணவர்கள்

ஏத்துதற்குக் = வணங்குவதற்கு

கூசும் மலர்ப்பாதம் = கூசுகின்ற மலர்ப் பாதம்

தந்தருள வந்தருளுந் = தந்து அருள வந்து அருளும். அவனே வந்து, பின் அவனே நமக்கு தருகிறான். அவன் வந்தால் கூட நாம் அவனை பார்பதை விட்டு விட்டு, நமக்குள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கிறோம்.

தேசன் = எல்லா தேசங்களிலும் இருப்பவன். அல்லது ஒளி உருவமானவன் என்றும் பொருள் கொள்ளலாம்

சிவலோகன் = சிவ லோகத்தின் தலைவன்

தில்லைச்சிற் றம்பலத்துள் = தில்லை சிற்றம்பலத்துள் உறைபவன்

ஈசனார்க்கு அன்பு யார் யாம் யார் = ஈசன் மேல் அன்பு கொண்டவர் யார், நாம் யார்,

ஏலோர் எம்பாவாய் = .என் பாவையே

சிற்றம்பலம் .- சிறிய அம்பலம். அப்படி என்றால் பேரம்பலம் என்று ஒன்று இருக்கிறதா ? சிற்றம்பலம் எங்கு இருக்கிறது தெரியுமா ? அது தில்லை (சிதம்பரம்) என்ற ஊரில் இல்லை. அது அங்கு இல்லை என்பது தான் சிதம்பர இரகசியம்.

அந்த இரகசியம் என்ன என்று சொல்ல எனக்கு ஆவல் தான்...அறிய உங்களுக்கும் ஆவல் என்றால் please click g+1 button below the blog....


2 comments:

  1. "விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர் பாதம்" என்றால், அந்த மலர்ப் பாதத்தையும் பூசிப்பதற்கு தகுதி இல்லாமல் விண்ணவர்கள் கூடக் கூசுகிறார்கள் என்று பொருள் கொண்டால் என்ன?

    வரவர நீ சும்மா ஆல்பிரட் ஹிட்ச்காக் மாதிரி ஆகிவிட்டாய்!

    ஆனால் இத்தனை தமிழ் பொக்கிஷங்களைத் தருவதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எதற்காக கூச வேண்டும் ? அந்த பாதம் மலர் போன்று இருப்பதனாலா ? அப்படி என்றால் அதை தொடுவதற்கு வேண்டுமானால் கூசலாம். வணங்க ஏன் கூச வேண்டும் ? ஒரு வேளை, அந்த மலர் பாதங்களை அவனே தர வந்து, அதை பெற்றுக் கொள்ள தகுதி இல்லாததால் கூசினார்களோ ? தெரியவில்லை.

      Delete