Friday, February 15, 2013

கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம்


கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம் 


இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். அதற்கான காரணங்களை அடுக்குகிறான்.

அதில் ஒன்று , என்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்பது.

பதினாயிரம் மனைவிகள்.

மூன்று பட்டத்து மகிஷிகள்

சக்ரவர்த்தி. கை சொடுக்கும் நேரத்திற்குள் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். கிடைத்திருக்கும்.

இருந்தும் அவனால் காமத்தை வெல்ல முடியவில்லை.

என்ன அர்த்தம் ....?

புலன் இன்பங்கள் அனுபவிப்பதன் மூலம் தீர்வதில்லை.

நெய்யை விட்டு தீயை அணைக்க முடியாது.

அனுபவிக்க அனுபவிக்க அது மேலும் மேலும் என்று கொழுந்து விட்டு எரிகிறது.

பாடல்


வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில்,
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம்
உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 


பொருள் 

வெள்ளநீர் உலகினில் = வெள்ளம் சூழ்ந்த இந்த உலகம்

விண்ணில் = விண்ணுலகம்

நாகரில் = நாகர்கள் வாழும் பாதாள  உலகம்

தள்ளரும் பகையெலாம் = இந்த மூன்று உலகிலும் வெல்ல முடியாத பகை எல்லாம்

தவிர்த்து = வென்ற

நின்றயான் = நின்ற நான்

கள்ளரில் = கள்ளர்களைப் போல

கரந்துறை = மறைந்து வாழும்

காமம் = காமம்

ஆதியாம் = காமத்தை மூலமாகக் கொண்ட

உள்ளுறை = உள்ளத்தில் மறைந்து வாழும்

பகைஞருக்கு = பகைவர்களுக்கு

ஒதுங்கி வாழ்வெனோ? = ஒதுங்கி வாழ்வேனா ?

காமம், கள்ளனை  போல சொல்லாமல் வரும்.

வந்த பின் நம்மிடம் உள்ள மானம், புகழ் போன்றவற்றை கொள்ளை அடித்துச் செல்லும்

அது பகைவர்களை போல, நம்மை மிரட்டும். நம்மை வலிமை குன்றச் செய்யும்.

அது உட்பகை. அதை வெல்ல   படை பலம், ஆள் , அம்பு, சேனை ...இது எல்லாம் தேவை இல்லை.

காமத்தை தூண்டும் பெண்களை விட்டு அவர்கள் இல்லாத இடமான கானகம் நோக்கி போக முடிவு செய்தான் தசரதன்.

நீங்கள் ஒன்றின் மேல் உள்ள பற்றை விட வேண்டுமானால், அதை விட்டு நீங்க வேண்டும்.

பிடியை விட்டால் தானே பற்றை விட முடியும்.

TV யை போட்டு வைத்துக் கொண்டே படிப்பில் கவனம் இல்லை என்றால் எங்கிருந்து வரும்.

எது நம் கவனத்தை சிதறடிக்கிறதோ , அதை விட்டு விலக வேண்டும்.

தன்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்று தைரியமாக சபையில் அறிவிக்கிறான்  தசரதன். எத்தனை பேருக்கு அந்த துணிச்சல் வரும் ?

படிக்க வேண்டிய பாடங்கள்


1 comment:

  1. அதைத் தனது மகனிடமே சொல்கிறான்!அப்படியானால் அவர்களுக்கிடையே என்ன விதமான உறவு இருந்திருக்க வேண்டும்!

    இராமனோ ஒரே பத்தினி விரதன். தன் தந்தை இப்படிச் சொல்லும் பொழுது, இராமன் என்ன நினைத்திருக்க வேண்டும்?!

    நன்கு முதிர்ந்த தந்தை-மகன் உறவுக்கு உதாரணம் இது.

    ReplyDelete