Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4



கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4




அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் மூன்று  அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று கடைசி அடி

தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே


ஒளியில் விளைந்த, உயர் ஞானமான மலையின் உச்சியில், அன்பில் அருளில் விளைந்த  ஆனந்தத் தேனை, வெறும் பாழில், வெறும் தனியில் உதித்த அதை  அருளியவன்  தேசிகன். தேசிகன் என்றால் குரு என்று பொருள்

எத்தனையோ குரு உண்டு அதில் இது எந்த குரு என்ற கேள்வி வரும் அல்லவா ?

முகம் ஆறு உடை தேசிகன்...ஆறுமுகம் உள்ள குரு ஒரே ஒருவன் தான், அவன் தான் முருகன்

அவன் என்ன செய்தான் ...

அருணகிரி தெரிய சொல்லவில்லை, தெளிய சொன்னான்...அதாவது தெரிதல் அறிவின்பால் பட்டது...தெளிதல் உணர்வின் பால் பட்டது...."பட்டு தெளிஞ்சா தான்  உனக்கு புத்தி வரும் " என்று சொல்வதைப்  போல ....சொன்னால் புரியாது  அனுபவித்தால் தான் தெரியும்.எனவே தெளிய விளம்பியவா என்றார்

இப்படி ஒரு பாடலில் இவ்வளவு அர்த்தம்....

வேறு என்ன சொல்லப் போகிறேன் ...முடிந்தால் மூல நூலை படித்துப்  பாருங்கள் ...இப்படி எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன

1 comment:

  1. வெறும் வெளியிலும், பாழிலும்தான் ஞானம் வரும் என்கிறாரா? கனமான பாடல்.

    ReplyDelete