Wednesday, March 13, 2013

இராமாயணம் - சரண் நாங்களே


இராமாயணம் - சரண் நாங்களே

கீழே உள்ள பாடலைப் படியுங்கள் ஒரு தரம்

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

படித்து விட்டீர்களா ? நன்றாகப் படித்தீர்களா ? சந்தேகம் இல்லையே ?

மகிழ்ச்சி....இறைவனிடம் சரண் அடைந்ததற்கு மகிழ்ச்சி.

நான் எப்ப சரண் அடைந்தேன், கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன் ...என்னைப் போய் சரண் அடைந்தேன் என்று எப்படி சொல்லாலம் என்று சண்டைக்கு வராதீர்கள்....

தப்புதான்...நீங்கள் மட்டும் சரண் அடைந்ததாக கூறியதற்கு...நீங்களும், உங்களை சேர்ந்த எல்லோரும் ஒன்றாக சரண் அடைந்ததாக கூறியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி....

..நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நீங்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தெரிகிறது...

கம்பரின் கருணையை பாருங்கள்....தான் மட்டும் சரணம் அடைந்தால் போதாது, தன் பாடலை படிக்கும் எல்லோரும் அவர்கள் சுற்றத்தார் மற்றும் நண்பர்களுடன் சரண் அடைய வேண்டும் என்று பாடி இருக்கிறார்...

ஒவ்வொரு முறை இந்த பாடலை படிக்கும் போதும்....

"சரண் நாங்களே " என்று நீங்கள் சொல்வதை தவிர்க்க முடியாது.

நாங்கள் என்றால் பன்மை. "சரண் நானே " என்று சொல்லவில்லை.


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்! என்று ஆண்டாள் கூறியது போல....


உனக்கே சரண் நாங்கள் என்று ஆரம்பிக்கிறார் கம்பர்.


"தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " என்று சொல்லிவிட்டுத்தான் நீங்கள் காப்பியத்தை மேலே படிக்க முடியும்.

இராமாயணம் ஒரு சரணாகதி காப்பியம்.

சரணமே கதி. அது அல்லால் வேறு வழி இல்லை.

தொடக்கத்திலேயே சரணாகதி செய்து விடுகிறார் கம்பர்.

 தான் மட்டும் உய்ந்தால் போதாது என்று காலம் காலமாய் தன் காப்பியத்தை படிக்கும் எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று எல்லோரையும் சரண் அடைய வைக்கிறார் கம்பர்.

2 comments:

  1. நீ என்னதான் சொன்னாலும், இந்த "விளையாட்டு" விஷயம் உறுத்தத்தான் செய்கிறது.

    ReplyDelete
  2. inda poem la ivvalu vishyam irukku!Amazing!

    ReplyDelete