Sunday, March 24, 2013

சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத


சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத 


பெரிய கடல். எப்போதும் அலை அடிக்கும் கடல். சிலு சிலு என்று காற்று தலை கலைக்கும் கடற்கரை. 

காலோடு இரகசியம் பேசும் பொடி மணல்.

அந்த ஊரில் அவ பெரிய ராங்கிக்காரி. அவ நடையே பெரிய இராணி மாதிரி இருக்கும். கடல் மணலில் அவ கால் படித்து நடப்பதை பார்த்தால் என்னவோ  அவதான் இந்த கடல் பூராவையும் வாங்கிட்ட மாதிரி ஒரு மிதப்பு. 

அவ நடந்து போகும் போது , அவ பின்னாடி ஒரு சில அன்னங்கள் நடந்து போகும். அவ நடக்கிற மாதிரியே நடந்து  பழகிக் கொள்ளலாம் என்று....

நடக்குமா ? நடையாய் நடந்தாலும் நடக்காது....

ஏய், அன்னமே, அவ பின்னாடி போகாத. அவ பின்னாடி போனேனா, அவ நடைய பார்த்துட்டு உன் நடையை எல்லோரும் கேலி பண்ணுவார்கள்.

அவ நடைய பாரு, என்னமோ இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி, என்ன ஒரு இராணி மாதிரி நடந்து போறா...அவ பின்னாடி போனா உன் நடைய யாரு பாக்கப் போறா...சொல்றத சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம்....

பாடல் 


சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்

பொருள் 



சேரல் = அவ கூட சேராத 

 மட அன்னம்! = மண்டு அன்னமே 

 சேரல் = சேராத 

நடை ஒவ்வாய் = அவ நடையோடு உன் நடை ஒத்துப் போகாது 

சேரல், மட அன்னம்! = சேராதே மட அன்னமே 

 சேரல், நடை ஒவ்வாய்: = சேராதே, நடை ஒத்துப் போகாது 

ஊர் திரை = அலை அடிக்கும் 

 நீர் வேலி = நீரை வேலியாகக் கொண்ட ஊரில் 

 உழக்கித் திரிவாள் பின் = பெரிய வெற்றி பெற்றவள் மாதிரி திரிவாள் பின் 

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய் = சேராதே மட அன்னமே 


எழுதியவர் இளங்கோ அடிகள் என்ற துறவி 

No comments:

Post a Comment