Friday, March 8, 2013

இராமாயணம் - தாம் உள ஆக்கலும்


இராமாயணம் - தாம் உள ஆக்கலும்

இந்த பாடலுக்கு இது மூன்றாவது ப்ளாக்.

அவ்வளவு இருக்கிறது இந்த பாடலில்.


உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.

நாம் செய்யும் எதிலும் நம் திறமை , அறிவு வெளிப்படும். இந்த ப்ளாகில் நான் படித்த அல்லது கேட்ட  தமிழ் வெளிப்படலாம். என் எண்ணங்களை வெளிபடுத்தும் திறமை வெளிப்படலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் உங்களின் திறமையும் அறிவும் வெளிப்படும்.

ஆனால், உங்கள் பிள்ளைகளிடம் நீங்களே வெளிப் படுவீர்கள். உங்கள் மகனோ அல்லது மகளோ ஏதோ ஒரு விதத்தில் உங்களை போலவே இருக்கும். நடை, உடை, பாவனை இதில் நீங்களே இருப்பீர்கள்.

இறைவன் இந்த உலகம் அனைத்தையும் படைத்தான்...அதில் அவன் இருந்தான் ..."தாம் உள ஆக்கலும் ". தான் உள்ளபடி, தான் இருக்கின்றபடி அதைப் படைத்தான்.

இறைவன் இல்லை என்று சொல்லுபவனுக்குள் இருந்து சொல்லுபவனும் அவனே

எல்லோரும் அடித்துக் கொண்டு சாவதை பார்த்து அலகிலா விளையாட்டு உள்ளவர்  அவர் என்றால் அவரை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று கேட்க்கும் புத்தியும் அவன் தான்.

அவன் எல்லாவற்றிலும் தானே இருந்து வெளிப்படுகிற மாதிரி அவன் ஆக்கினான்.

உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் வெளிப்படுகிற மாதிரி.

உங்கள் பிள்ளைகள் உங்களை மறுதலித்தாலும், உங்கள் மேல் கோபம் கொண்டாலும், உங்களை தன் பெற்றோர் இல்லை என்று சொன்னாலும் அதன் கண்ணும், மூக்கும், வாயும், ஜாடையும் உங்களைப் போலவே இருக்கும். அதை மாற்ற முடியாது.

நீங்கள் இறைவன் இல்லை என்று சொன்னாலும் நீங்கள் இறைவனின் அம்சம் தான்...அதை மாற்ற முடியாது...

தாம் உள ஆக்கலும் ....

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அர்த்தம் செறிந்த வார்த்தைகள்.....

இன்னும் இந்த பாடலைப் பற்றி சொல்லி முடியவில்லை....




3 comments:

  1. இந்த உலகமே இறைவனின் பண்பில் உருவானதானால், நாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதும் இறைவனின் பண்பின் வெளிப்பாடுதானா?!?!? எப்படிப்பட்ட இறைவன் அய்யா அவன்! அப்படிப்பட்ட இறைவனை வணங்க வேண்டிய அவசியம் என்ன?

    எல்லாவற்றிற்கும் "ஏன்?" என்ற கேள்விக்கு இறைவனை இழுக்க முடியாது. நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என் பாட்டியிடம் கேட்டேன்: "இறைவன் ஏன் கொசுவைப் படைத்தார்?" பாவம், அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை! இன்றுவரை அதற்குப் பதில் எனக்குக் கிடைக்கவில்லை!

    ReplyDelete
  2. ‘தாம் உள ஆக்கலும்’ என்பது அத்வைத சாரம். இறைவன் இவ்வுலகை முதன் முதலாகப் படைக்கும் போது எதிலிருந்து படைத்திருக்க முடியும்? ஏனெனில் படைப்பதற்கு முன் எதுவுமே இல்லையே. எனவே அப்போது இருந்தது இறைவன் ஒருவனே. எனவே தம்மிடமிருந்துதான் அனைத்தையும் படைத்திருக்க முடியும். எனவேதான் அனைத்தும் அந்த இறைவனின் அம்சம் என்று வேதம் கூறுகிறது. அதைக் குறிப்பதுதான் ‘தாம் உள ஆக்கலும்’
    மற்றொரு அர்த்தம், தாம் உள ‘ஆக்கலும்’ மட்டுமல்ல, தாம் உள ‘நிலைபெறுத்தலும்’, தாம் உள ‘நீக்கலும்’ தான். ஏனெனில், காக்கப்படுவதும் இறைவனின் அம்சமே. நீத்தபின் அவை அடைவதும் இறைவனையே. ‘பூர்ணமத: பூர்ணமிதம் ….” ‘தாம் உள’ என்பது முத்தொழிலைக்குறிக்கும் மூன்று பதத்திற்குமே பொருந்தும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.

    ReplyDelete
  3. சீர் நான்காக பிரித்தல் அவசியம்

    ReplyDelete