Thursday, March 28, 2013

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள்

இராமாயணம் - தோல்வி கண்டு துவளாதீர்கள் 


 உங்களுக்கு  ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி எது என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, பங்கு சந்தையில் தோல்வி என்று பல தோல்விகள் இருக்கலாம். அப்படி எல்லாம் பெரிய தோல்வி ஒன்றும் இல்லை என்று நீங்கள் கூறினால், நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

தோல்வியில் மனிதன் துவண்டு போகிறான்...சில சமயம் வாழ்க்கையே முடித்துக் கொள்ள கூட செய்கிறான்.

தோல்வியை எப்படி எதிர்கொள்வது . ?

இராமன் எப்படி எதிர் கொண்டான் என்று பார்ப்போம்.

இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். மந்திரிகள் அதை அமோதித்தார்கள். ஊரே விழாக் கோலம் பூண்டு விட்டது.

இராமன் சக்ரவர்த்தியாகப் போகிறான். ஒரு தடையும் இல்லை.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். மிகப் பெரிய பதவி, அதிகாரம், செல்வம் எல்லாம் வரப் போகிறது. நீங்களாய் இருந்தால் எப்படி இருப்பீர்கள்.

இராமன் தசரதன் மாளிகைக்கு வருகிறான்.

கைகேயியை வணங்குகிறான்.

தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 

தாய் என்று நினைத்துப் போனான், அவளோ கூற்றுவானாக வந்து நின்றாள் .

உன் தந்தை உனக்கு ஒன்றை சொல்ல சொன்னார் என்றாள். என்ன சொன்னாள்  என்று உங்களுக்குத் தெரியும்.

நீ 14 வருடம் காடு போ. பரதன் நாடு ஆள வேண்டும் என்று கூறுகிறாள்.


நாட்டை ஆள இருந்தவனை, நாடு இல்லை என்பதுடன் நிற்காமல், காட்டுக் போ என்றாள்.

எப்படி இருக்கும் ? மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் தள்ளி விட்ட மாதிரி.

நீங்களா இருந்த என்ன செய்து இருப்பீர்கள்? கோபம் வந்திருக்கும். வருத்தம் வந்திருக்கும். ஒண்ணும் முடியவில்லை என்றால் துக்கத்தில் மனம் ஒடிந்து வாழ்க்கையையே முடித்து கொள்ளலாம் என்று கூட நினைத்து இருப்பீர்கள்.

அரசு கிடைக்காதது ஒரு புறம். எப்படி மற்றவர்களிடம் முகம் காட்டுவது. எல்லோரும் சிரிப்பார்களே. மற்றவர்களை விடுங்கள், சீதை என்ன நினைப்பாள். தன் கணவன் சக்ரவர்த்தியாகப் போகிறான் என்று நினைத்து கொண்டு இருந்தவளிடம் போய் , காட்டுக்குப் போக வேண்டும் என்றால் அவள் என்ன நினைப்பாள் ?

இராமன் முகம் வாடி இருக்க வேண்டும் அல்லவா ? துவண்டு இருப்பான் அல்லவா ? ஒரு கணமாவது வருந்தி இருப்பானா ?

அந்த ஏமாற்றத்தை , தோல்வியை அவன் எப்படி எதிர் கொண்டான் என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம். இராமனுக்கு வந்த அளவிற்கு நமக்கு ஏமாற்றமோ, இழப்போ வர வழியில்லை

அவன் அதை எப்படி ஏற்றுக் கொண்டான் என்பதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.




No comments:

Post a Comment