Saturday, April 13, 2013

திருக்குறள் - தீயதும் இல்லாததும்


திருக்குறள் -  தீயதும் இல்லாததும் 


தீமை செய்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து இருப்பார்கள். பெரும்பாலானோர் கூறுவது வறுமை, மற்றும் ஏழ்மை. என்னிடம் ஒன்றும் இல்லை எனவே திருடினேன், கொள்ளை அடித்தேன், பணம் தருகிறேன் என்று சொன்னதால் கொலை செய்தேன், பொய் சாட்சி சொன்னேன், ஆள் கடத்தினேன் என்று சொல்லுவார்கள்.

பசி வர பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார், நீ இல்லை என்று தீமை செய்யாதே. உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம், உன்னிடம் ஒழுக்கம் இருக்கிறது, இதுவரை பிறர் பொருளை விரும்பாத நல்ல குணம் இருக்கிறது, ஞாயம் அநியாயம் அறியும் அறத்தின் பாற்பட்ட அறிவு இருக்கிறது.

இல்லை என்று தீயவை செய்தால், இந்த பொருள் மட்டும் அல்ல இந்த நல்ல குணங்களும் இல்லாமல் போகும்.

நல்ல பெயர் போய் விட்டால் அதை சம்பாதிப்பது மிக மிக கடினம். எனவே வறுமை காரணமாக தீமை செய்து இன்னும் வறுமையை சம்பாதித்துக் கொள்ளாதே.


பாடல்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


பொருள்






இலன்என்று தீயவை செய்யற்க = இல்லை என்று தீமை செய்யாதே

செய்யின் = செய்தால்

இலன்ஆகும் = இல்லாமல் போகும்

 மற்றும் பெயர்த்து = மற்றவற்றையும் பெயர்த்துக் கொண்டு போய் விடும்

எது மற்றது - பொருள் இல்லாத மற்ற சொத்துகள் - நல்லவன் என்ற பெயர்....நல்ல மகன் , நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல குடிமகன், ஒழுக்கமான ஆள், நம்பத் தகுந்தவன் என்ற பெயர்....இது எல்லாம் பெயர்த்துக் கொண்டு போய் விடும்.

அதன் பின் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் கூட மதிக்காது. எனவே, பொருள் இல்லை என்று தீமை செய்யாதே.

வள்ளுவர் தீமை என்று சொன்னார். திருடு என்று சொல்லவில்லை. தீமை எந்த விதத்திலும் வரலாம்..இலஞ்சம், பொய் கையெழுத்து, தவறாக வேலை செய்யும் இடத்தில் பணம் வருவது, பொய் சொல்லுவது, ஒட்டு கேட்பது...எல்லாம் தீமையில்  அடங்கும்....

சின்ன பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்





1 comment:

  1. For a long time, I have been fascinated by the question: "Which is worse - to be unjust or to be unkind?" I used to think that being unjust is worse, but now I think being unkind is worse. When I read this Kural, I was reminded of this. If a poor man steals a loaf of bread, he deserves kindness.

    Just sharing something that came to my mind. This kural and your explanation are both great.

    ReplyDelete