Monday, April 8, 2013

தனிப்பாடல் - மரண பயம் நீங்க


தனிப்பாடல் - மரண பயம் நீங்க 


ஒரு நாள் நீங்க காரில் போகும்போது சீட் பெல்ட் போடாமல் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போலீஸ்காரர் உங்களை பிடித்து விடுகிறார். தப்புதான்....அவர் உங்களிடம் கொஞ்சம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு இருக்கிறார் ..."என்ன சார், படிச்சவங்களே இப்படி வந்தா மத்தவங்கள என்ன சொல்றது ..." என்று லெக்சர் அடிக்க தொடங்கி விடுகிறார்...

அப்போது உங்கள் நண்பர், போலீஸ் - இல் ஒரு மிகப் பெரிய உயர் அதிகாரி அந்தப் பக்கம் வருகிறார் ...

"என்ன சார், இந்த பக்கம்" என்று உங்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விடுகிறார்.

அப்ப அந்த டிராபிக் ஆபீசர் எப்படி நடுங்குவார் உங்களைப் பார்த்து ? "என்ன சார், அவர் உங்க நண்பர்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதான்னு " உங்களை பார்த்து கூழை கும்பிடு போடுவார் இல்லையா ?

நமக்கு ஒருவரால் பிரச்சனை என்றால், அந்த ஒருவரின் மிக மிக உயர் அதிகாரியின் நட்பு இருந்தால் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ? பிரச்சனை செய்த நபரே நம் காலில் வந்து விழுந்து விடுவார் இல்லையா ?

நமக்கு யாரால் மிகுந்த பயம், தொல்லை ?

எமனால்...எப்ப வந்து உயிரை எடுப்பானோ என்று...அவனுடைய உயர் அதிகாரி யார் ? மீனாட்சி. அவளோடு நாம் நட்பு கொண்டாள், இந்த சுண்டக்காய் எமன் என்ன செய்ய முடியும் ?

பலபடை சொக்கநாத புலவர் பாடிய பாடல்   

கான் தெண்டனிட்ட கருங்குழலாலை என் கண்மணியை 
தேன் தொண்டை வாய்ச்சியை தென் கூடலில் சிறு பெண்பிள்ளையை 
யான் தெண்டனிட்ட பொழுதே இயமன் எனக்கும் அடி 
யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் என்று ஓலை எழுதுவனே 
 
பொருள் 


கான் தெண்டனிட்ட கருங்குழலாலை = கான் என்றால் கானகம். அடர்ந்த இருண்ட கானகம் மண்டியிடும் மீனாட்சி முன், அவள் கூந்தல் கருமையை விட இந்த கானகம் ஒன்றும் பெரிய கருமை இல்லை என்று 

 என் கண்மணியை = என் கண்மணியை 

தேன் தொண்டை வாய்ச்சியை = தேன் அவள் தொண்டையில் எப்போதும் இருக்கும். அவ்வளவு இனிமையான சொற்கள் தொண்டையில் இருந்து வரும். 

தென் கூடலில் = மதுரையில் 

சிறு பெண்பிள்ளையை  = சிறிய பெண் பிள்ளையை 

யான் தெண்டனிட்ட பொழுதே = நான் வணங்கிய பொழுதே (தெண்டனிடுதல் = மண்டியிட்டு வணங்குதல் )

இயமன் = எமன் 

எனக்கும் = எனக்கும் (என்னை போன்ற பக்திமான்களுக்கும் )

 அடி யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் = நான் உங்கள் அடிமை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்கிறேன் என்று என்னிடம் விண்ணப்பம் அனுப்புவான் (வேலை கேட்டு )

 என்று ஓலை எழுதுவனே = என்று மனு (application ) போடுவானே 

காலா உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன் - என் 
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் 

என்றான்  பாரதி.

மரணப் பிரமாதம் நமக்கில்லை என்றார் அருணகிரி 

யாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்றார் நாவுக்கரசர் 

 இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க 
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; என்று காலன் வரும் போது அபிராமியின் துணை வேண்டும் என்கிறார் அபிராமி பட்டர் 

மீன்னாட்சி துணை இருந்தால் எமன் உங்களிடம் கை கட்டி வாய் பொத்தி வேலை செய்வான்....
 



2 comments:

  1. பலபடை சொக்கநாதர் என்ற புலவரை இவ்வளவு அருமையான பாடல் மூலம் அறிமுக படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்னியோன்னியமான வார்த்தைகளுடன் மீனாட்சியைப் பற்றி எழுதும் புலவர், அவளைத் தெண்டன் இட்டேன் என்பது இனிமை.

    ReplyDelete