Tuesday, April 9, 2013

தாயுமானவர் - உன்னை பூசை பண்ண மாட்டேன்


தாயுமானவர்  - உன்னை பூசை பண்ண மாட்டேன் 

தாயுமானவர் ஒரு நாள் பூஜைக்கு மலர் பறிக்கச் சென்றார். மலரின் அருகே சென்று அதை பறிக்க எத்தனிக்கையில் அவருக்கு ஒன்று தோன்றியது. இந்த மலரில் இருப்பதும் அந்த இறைவன் தானே. அந்த மலரைப் பறித்தால் அது வாடிப் போகுமே என்று நினைத்தார். பூவை பறிக்காமலே வந்து விட்டார். மலர் இல்லாமலே வழி படுவோம் என்று இரு கை கூப்பி வணங்க முனைந்தார்....மீண்டும் ஒரு சந்தேகம்...வணங்கப் படும் கல் சிலை தெய்வம் என்றால் வணங்கும் எனக்குள்ளும் இருப்பது அதே கடவுள் தானே...அப்படி என்றால் பாதி வணக்கம் தானே முன்னாள் இருக்கும் கடவுளுக்குப் போகும்...மீதி பாதி எனக்குள் இருக்கும் கடவுளுக்குத்தானே போகும்....இது என்ன பாதி வணக்கம் ?


பாடல் 

பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6.


சீர் பிரித்த பின் 

பண்ணேன் உனக்கு ஆனா பூசை ஒரு வடிவிலே 
பாவி இறைஞ்ச ஆங்கே 
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி 
அப் பனி மலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அல்லாமல் இரு கைதான் குவிக்க எனில் 
நாணும் என் உள்ளம் நிற்றி நீ 
நான் கும்பிடும் டோதரைக் கும்பிடாதலால்
நான் பூசை செய்யல் முறையோ
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே அவித்தின் முளையே
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே
கதிக்கான மோன வடிவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நர்த்தமிடும் 
கருணாகர ககடவுளே.

.

1 comment:

  1. அற்புதமான பாடலை பதம் பிரித்து அருமயான விளக்கமும் தந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏🏻

    ReplyDelete