Tuesday, June 11, 2013

பிரகலாதன் - குளிரும் நெருப்பு

பிரகலாதன் - குளிரும் நெருப்பு 


இதிகாசங்கள்  நம் கற்பனையின் எல்லைகளை விரிவாக்குகின்றன.

பெரிதாக சிந்திக்க வழி கோலுகின்றன. தாடகை மலைகளை தன் கொலுசில் மணிகளாக போட்டுக் கொள்வாள் என்று படிக்கும் போது நம் கற்பனை விரிகிறது....எவ்வளவு பெரிய மலை, எவ்வளவு பெரிய கொலுசு, அதை அணியும் கால் எவ்வளவு பெரிசா இருக்கும், அப்படிப்பட்ட காலை கொண்ட ஆள் எவ்வளவு பெரிசா இருப்பாள் என்று எண்ணத் தலைப் படுகிறோம்.

எண்ணமும் கற்பனையும் நம்ப முடியாத அளவுக்கு விரிவடைகின்றது. அவ்வளவு பெரிய ஆளை நாம் கற்பனை செய்யத் தலைப் படுகிறோம்.

எதற்கு இது எல்லாம் என்றால்....இறைவன் என்பவன் நம் கற்பனையின், அறிவின் எல்லைகளை தாண்டியவன்....இறைவனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் நம் மனமும், எண்ணமும், கற்பனையும் விரிவடைய வேண்டும். மிகப் பெரிய அளவில் விரிய வேண்டும்.

நாம் அறிந்த எல்லாவற்றையும் கடந்து சிந்திக்க பழக வேண்டும்.

நான் படித்த அறிவியலில், நான் படித்த தர்க்க (logic ) சாஸ்திரத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கக்  கூடாது.

நாம் அறிந்தவை, பார்த்தவை, படித்தவை இவற்றை எல்லாம் கடந்து நமக்கு சிந்திக்க  கற்று தருகின்றன இந்த இதிகாசங்கள்.

நரசிம்மம் இவ்வளவு பெரிசா ? இரணியனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவுதானா என்று சிந்திக்கும் போது உங்களை அறியாமலையே உங்கள் கற்பனையின் எல்லை விரிகிறது.

இப்படி பட்ட பாடல்களை நாளும் படிக்கு போது, ஒரு நாள் உங்கள் அறிவின் எல்லைக்கு உட்படாத ஒன்றை உங்களால் சிந்தனை பண்ணி பார்க்க முடியும், உணர முடியும்.

எனவே,  இதிகாசங்களை படியுங்கள்.

பிரகாலதனை ஆயுதங்கள் ஒன்றும் செய்ய வில்லை என்ற உடன், அவனை தீயில் எறியுங்கள் என்று ஆணை இருக்கிறான், இரணியன்......

பாடல்



'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம்தொறும் கொணர்ந்து  எண்ணெய்

இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட;
அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்; "அரி" என்று
தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது, சுடு தீயே.

1 comment:

  1. இந்த கற்பனை தான் பாவம் நம் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய் விட்டது. நம் காலத்தில் TV இல்லாததால் நாம் கதை புத்தகத்தில் வரும் கதா பாத்திரங்கள் எல்லாரையும் கற்பனை செய்து கொண்டோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரமும் வேறு வேறு மாதிரி இருந்தது. ஆனால் இப்பொழுது தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகரே நம் குழந்தைகளுக்கு அந்த கதாப்பாத்திரம்.

    ReplyDelete