Saturday, June 15, 2013

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர்

பெரிய புராணம் - திரு ஞான சம்பந்தர் 


ஞானம் இரு வகைப் படும்.

ஒன்று கற்று அறிவது. இன்னொன்று அனுபவத்தில் வருவது.

இதை பர ஞானம், அபர ஞானம்  சொல்லுவார்கள்.

சில பேருக்கு நன்றாகப் பாட வரும்....குரல் இனிமை இருக்கும், தாள லயம் இருக்கும் ஆனால் இசை பற்றிய ஞானம் இருக்காது.

சில பேருக்கு பாடலை நன்றாக விமர்சிக்கத் தெரியும், ஆனால் பாட வராது.

இரண்டும் சேர்ந்து இருப்பது மிக சிறப்பானது.

சில புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மாதிரி பேசுவார்கள். அனுபவ அறிவு இருக்காது.

இந்த இரண்டும் வரப் பெற்றவர் திரு ஞான சம்பந்தர்.

இரண்டு ஞானங்களின் சம்பந்தம், ஒரு பிணைப்பு அவருக்கு இருந்தது.

அதை சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்....

பாடல்

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தர ரந்நிலையில்.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 

சிவன் அடியே  சிந்திக்கும் திரு பெருகும் சிவ ஞானம் 
பவம் அதனை அற  மாற்றும்  பாங்கில் ஓங்கிய ஞானம் 
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய  மெய்ஞ்ஞானந்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தர் அந்த நிலையில் 

பொருள்





சிவன் அடியே = சிவனின் திருவடிகளையே

சிந்திக்கும் = சிந்திக்கும்

திரு பெருகும் சிவ ஞானம் = செல்வம், புகழ், அழகு, பெருமை இவை எல்லாம் பெருகும்  சிவ ஞானம்
 
பவம் அதனை அற  மாற்றும் = மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வினைகளை அறவே மாற்றும்

பாங்கில் ஓங்கிய ஞானம் = உலகில் ஓங்கிய ஞானம்

உவமையிலாக் கலைஞானம்  = உவமை இல்லாத படி உயர்ந்து விளங்கும் கலை ஞானம் (புத்தகங்களைப்  படிப்பதால் வரும் ஞானம்)


உணர்வரிய  மெய்ஞ்ஞானந் = உணர்வர்தர்க்கு அரிதான மெய் ஞானம்

தவமுதல்வர் = தவத்தினால் முயன்று

சம்பந்தர் தாம் உணர்ந்தர் அந்த நிலையில் = திரு ஞான சம்பந்தர் உணர்ந்தார், அந்த நிலையில்.

இந்த பாடலுக்கு மிக நீண்ட விளக்கங்கள் உள்ளது. இது பற்றி மிகுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்துள்ளன.

சாரம் இதுதான். 



1 comment:

  1. இதிலே சண்டை போட என்ன இருக்கிறது?!

    ReplyDelete