Monday, July 15, 2013

திருக்குறள் - ஒழுக்கம்

திருக்குறள் - ஒழுக்கம் 


ஒழுக்கம் என்றால் என்ன ? எது எல்லாம் ஒழுக்கம், எது எல்லாம் ஒழுக்கம் அல்லாதன ?

ஒழுக்கம் என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்லப் படுகிறது.

வரைமுறை, நெறி, நல்லன செய்தல், வேதம், கீதை போன்ற புத்தகங்களில் சொல்லியபடி நடத்தல் என்று பலவித அர்த்தங்கள் சொல்லப் படுகின்றன.

நம் முன்னவர்கள் மிகுந்த புத்திசாலிகள்.

ஒழுக்கம் என்பது காலத்தோடு சேர்ந்து மாறி வருவது. இனத்திற்கு இனம் மாறு படும், காலத்திற்கு காலம் மாறுபடும். எனவே அதற்கு என்றைக்கும் பொருந்தும் ஒரு விதியை சொல்லுவது கடினம்.

அதற்காக சொல்லாமலும் விட முடியாது.

என்ன செய்வது ?

முதலில் ஒழுக்கம் என்ற வார்த்தையை பாருங்கள். ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. கடை பிடிப்பது.

ஏதோ ஒன்றை கடைப் பிடிப்பது ஒழுக்கம்.

தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி, உடற் பயிற்சி செய்தால் அது ஒரு ஒழுக்கம்.

மாலையில் ஒரு மணி நேரம் படித்தால், அது ஒரு ஒழுக்கம்.

நீங்கள் ஏதோ ஒன்று கடை பிடிக்கிறீர்கள். அந்த பழக்கத்தை பொருத்தவரை நீங்கள் ஒரு  ஒழுங்கை கடை பிடிக்கிறீர்கள்.

சரி, ஏதோ ஒரு சில நாள் செய்கிறேன் மற்ற நாள் செய்வது இல்லை என்றால் நான் ஒழுங்கானவனா ? என்றால் இல்லை.

ஏன் ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. வீட்டில் கூரையில் ஏதாவது ஓட்டை இருந்தால் , அல்லது தண்ணீர் தொட்டியில் சின்ன விரிசல் இருந்தால் நீர் ஒழுகும். ஒழுகுதல் என்றால்  தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பப்ப வந்தால் அதை நீர் சொட்டுகிறது என்போம். நீர் ஒழுகுகிறது என்று  சொல்ல மாட்டோம்.


எப்படி ஒழுகுதல் என்றால் விடாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதோ அது போல  ஒழுக்கம் என்றால் விடாமல் கடை பிடிப்பது.


சரி, தினமும் திருடுவதை நான் கடை பிடிக்கிறேன்..ஒரு நாள் கூட தவறுவது இல்லை. நான் ஒழுக்கமானவனா ?

இல்லை.

ஏன் ?

மீண்டும் அந்த ஒழுக்கம் என்ற வார்த்தையைப் பாருங்கள்.

எங்கிருந்து ஒழுகும் ? மேலிருந்து கீழே ஒழுகும். கீழிருந்து மேலே போவது ஒழுகுதல் அல்ல.

எனவே, நம்மை விட பெரியவர்கள், உயர்ந்தவர்கள், சான்றோர்கள் சொல்லுவதை , செய்ததை நாமும்இடை விடாமல்  கடைபிடித்தால் அதற்க்கு பெயர் ஒழுங்கு.

நம்மை விட கீழானவர்களிடம் இருந்து நாம் ஒன்றை கற்று அதை செய்தால் அது ஒழுங்கு ஆகாது.


இப்போது புரிகிறதா ஒழுங்கு என்றால் என்ன என்று ?

பெரியவர்கள் - அறிவில், பண்பில், அனுபவத்தில் - அவர்களைப் பின் பற்றுவது  ஒழுங்கு.

பெரியவர்கள், சான்றோர் யார் என்ற கேள்வி வரும். அதற்க்கு வள்ளுவர் பல இடங்களில் விடை தந்து இருக்கிறார்.

செயற்கரிய செய்வார் பெரியோர் என்பது ஒரு விதி.

துறவிகள் - நிஜமான துறவிகள் - உள்ளத் துறவிகள் அவர்கள் மிகப் பெரிய வழி காட்டிகள்.  எனவே, வள்ளுவர் நீத்தார் பெருமை என்று இறை வணக்கம், வான் சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரம் முடிந்தவுடன் நீத்தார் பெருமை என்று துறவிகளின் பெருமையை மூன்றாவதாகச் சொன்னார்.

ஒழுக்கம் என்பது புத்தகங்களில் இருக்கும் விதி முறைகள் அல்ல. வாழும் பெரியவர்கள், அவர்களின் வாழ்க்கை நெறிதான் ஒழுக்கத்தின் மூலாதாரம்.

பெரியோரை துணை கோடல் என்று ஒரு அதிகாரம்.
நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரம்
கேள்வி (கேட்டு தெரிந்து கொள்வது என்று ஒரு அதிகாரம்
சிற்றினம் சேராமை என்று ஒரு அதிகாரம்

இப்படி வாழ்வில் ஒழுக்கமாய் வாழ வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

ஒழுக்கத்தைப் பற்றி சில குறள்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.

விடுபட்டவற்றை இப்போது பார்ப்போமா ?







6 comments:

  1. ஒழுக்கம் பற்றி அருமையான விளக்கம்! மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ அங்க இங்க அரச புரசலா காதுல கண்ணுல விழுந்தது...நம்ம கைச் சரக்கு ஒண்ணும் கிடையாது...

      கண்ணதாசன் கூறிய மாதிரி

      வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்
      வாய்புறத் தேனை ஊர்புரத் தருவேன்

      அம்புட்டுதான்...

      Delete
  2. எந்த மலரில் அமர்ந்து எப்படி தேனை உறிஞ்சி எவ்வாறு எல்லாருக்கும் பயன் படும்படி தர வேண்டும் என்று தெரிந்து கொண்டு தருகிறீர்கள் . அதற்க்கு மிக மிக நன்றி.
    "ஒழுக்கம்" விளக்கம் மிக அருமை.

    ReplyDelete
  3. ஒழுக்கத்தின் பொருளை தெளிய வைத்தமைக்கு நன்றி, ஐய்யா

    ReplyDelete
  4. ஒழுக்கம் பற்றிய சிறந்த பதிவு நன்றி அய்யா.

    ReplyDelete