Wednesday, July 17, 2013

ஜடாயு - விதி சிதைத்த தரும வேலி

ஜடாயு - விதி சிதைத்த தரும வேலி 



தமிழில் உள்ள அற நூல்கள் எல்லாம் விதியை பெரிதும் நம்புகின்றன.

கம்பன் விதியைப்  பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

இராவணன் ஜடாயுவை வீழ்த்தினான். பின் சீதையை நிலத்தோடு கொண்டு செல்கிறான்

அடி பட்ட ஜடாயு நினைக்கிறான் ....

என் பிள்ளைகளான இராம இலக்குவனர்கள் இன்னும்  வரவில்லை. என் மருமகளான சீதைக்கு நேர்ந்த துக்கத்தை என்னால் போக்க முடியவில்லை. விதியே தர்மத்தின் வேலியை சிதைத்தால் என்ன செய்வது என்று மயங்குகிறான்.

பாடல்

'வந்திலர் மைந்தர்தாம்; 
     "மருகிக்கு எய்திய 
வெந் துயர் துடைத்தனென்" 
     என்னும் மெய்ப் புகழ் 
தந்திலர், விதியினார்; 
     தரும வேலியைச் 
சிந்தினர்; மேல் இனிச் 
     செயல் என் ஆம்கொலோ?

பொருள்





வந்திலர் = இன்னும் வரவில்லை

மைந்தர்தாம் = மைந்தர்களான இராமனும் இலக்குவனும்

மருகிக்கு = மருமகளுக்கு (சீதைக்கு)

எய்திய = வந்த

வெந் துயர் = வெம்மையான துயரத்தை

துடைத்தனென் = துடைத்தேன்

என்னும் மெய்ப் புகழ் = என்ற  உண்மையான புகழை

தந்திலர் = தரவில்லை (யார் தரவில்லை?)

விதியினார் - விதி என்ற அவர்

தரும வேலியைச் = தருமத்தின் வேலியை

சிந்தினர் = சிதைத்தார்

மேல் இனிச்  செயல் என் ஆம்கொலோ? = இதுக்கு மேல என்ன செய்வது ?

தான் சாகப் போகிறோம் என்பதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. சீதைக்கு என்ன  ஆகுமோ  என்று கவல்கிறான் 

தர்மம் என்பது நமக்கு ஒரு எல்லை வகுத்துத் தருவது. அதன் எல்லைக்குள் வாழ்வது நல்லது. எல்லை மீறுவது தொல்லை தரும். 

ஆனால், இங்கோ விதியே, தர்மத்தின் வேலியை சிதைக்கிறது. அப்படி சிதைந்த  வேலியின் வழியே அரக்கனாகிய இராவணன் சென்று விட்டான் என்பது கவி உள்ளாம் 


1 comment:

  1. "தந்திலர் விதியினார்" - என் விதி எனக்கு அதைத் தரவில்லை.

    "தரும வேலியைச் சிந்தினர்" - இப்படிப் போட்டு தருமத்தின் வரைமுரைகளைச் சிதைத்து விட்டனரே!

    அருமையான பாடல். முன்பு ஒரு அன்பர் எழுதியது போல, கி. ரா. வின் "ஜடாயு" கதைதான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete