Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல் 
 

 


1 comment:

  1. குறுந்தொகை தூள்தான்!

    சாதாரண மக்களையும், அவர்கள் உணர்சிகளையும், ஊரையும் நல்ல கவி நயத்தோடு சொல்கின்றன இந்தக் குறுந்தொகைப் பாடல்கள். அவற்றைத் தெரிந்தெடுத்துத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete