Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

1 comment:

  1. இனிமையான பாடல். நன்றி.

    ReplyDelete