Tuesday, September 3, 2013

திருக்குறள் - அறம் 


அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

வாழ்வின் நோக்கம் எல்லை இல்லாத இன்பம், அழிவு இல்லாத வீடு பேறு , இறைவன் திருவடி நிழல். 

இந்த மூன்றையும் அடைய அற வழியில் நடக்க வேண்டும். 

வெறுமனே அறம் , அறம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மனிதனுக்கு வெறுத்து விடும்.  யாரும் செய்ய  மாட்டார்கள். "போய்யா , வேற வேலை இல்லை ..." என்று எழுந்து போய் விடுவார்கள். 

எனவே, மனிதனுக்கு அறத்தோடு சேர்த்து இன்பமும் வேண்டும்.  அந்த இன்பத்தை அனுபவிக்க பொருள் வேண்டும்.  அப்படி பொருளும் இன்பும் அடையும் வழிகளும் அற வழிகளாக இருக்க வேண்டும். 

சரி, இந்த அறம் என்றால் என்ன ? 

அதைத்தான் மேலே பரிமேல் அழகர் சொல்கிறார். 

அறம் என்பது மனு முதலிய நூல்களில் சொன்னதை செய்தாலும், அது செய்யக்கூடாது என்று சொன்னவற்றை   செய்யாமல் இருப்பதும். 

அதாவது கற்று அறிந்தவர் சொன்ன வழி நிற்பது. 

இன்று எப்படி நடக்கிறது ? ஆழ்ந்த அறிவும், தெளிவும் இல்லாதாவர்கள் சொல்வதை எல்லாம்  கேட்டு மக்கள் திசை தெரியாமல் அலைகிறார்கள். 

யார் சொல்வதை கேட்கிறோம், யார் வழியை பின் பற்றுகிறோம், சொல்பவனின்  தன்மை என்ன என்று அறிய வேண்டும். சொல்பவன் எதற்காக சொல்கிறான் என்று   அறிய வேண்டும். 

அந்த அறம் மூன்று கூறுகளை உடையது.  அவை ஒழுக்கம் , வழக்கு, தண்டனை எனப்படும். 

வழக்கு , தண்டனை என்றால் என்ன ? 

இன்று தண்டனை பற்றி எவ்வளவோ சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கிறது ? தூக்கு தண்டனை விதிக்கலாமா , கூடாதா என்று எல்லாம் விவாதம் நடக்கிறது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவற்றை பற்றி சிந்தித்து ஒரே வரியில் அவற்றைப் பற்றி பரிமேல் அழகர் சொல்கிறார். 

வள்ளுவர் வழக்கு, தண்டனை இவற்றைப் பற்றியும் கூறி இருக்கிறாரா என்றால் , இல்லை. பின் எப்படி அறம் சொல்ல முடியும் ? 

ஏன் அவற்றை விட்டு விட்டார் ? 

அவற்றை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 




No comments:

Post a Comment