Friday, September 6, 2013

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் 


அரிச்சந்திர புராணம்.

கல் மனதையும் கரைய வைக்கும் கதை. கண்ணில் நீர் தளும்பாமல் படிக்க முடியாது.

என்ன ஆனாலும் சரி, உண்மை பேசுவதை விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறான் அரிச்சந்திரன். அவன் மனைவியும் அவனுக்கு உறு துணையாக இருக்கிறாள்.

நாட்டை  இழந்தான். சொத்து சுகங்களை இழந்தான். மனைவியை ஒரு அந்தணனுக்கு விற்றான். மகன்  போனான். மனைவிமேல் கொலைப் பழி விழுந்தது. அவளை தெருவில் இழுத்துக் கொண்டு கொலை களத்திற்கு கொண்டு  போனார்கள். அவளை சிரச் சேதம்  பொறுப்பும் அரிச்சந்திரனிடம் கொடுக்கப்  பட்டது.

கௌசிக முனிவன் அப்போது வந்து சொல்கிறான் " அரிச்சந்திரா, ஒரே ஒரு பொய் சொல். நீ எனக்கு அரசை தரவில்லை என்று ஒரு பொய் சொல். நீ இழந்த அத்தனையும் உனக்குத் திருப்பித் தருகிறேன் " என்றான்.

அரிச்சந்திரன் ஒத்துக்  கொள்ளவில்லை. அவன் மனைவியும் அதற்கு ஒப்பவில்லை. இருவரும் கௌசிக முனிவனிடம் கூறினார்கள்.....

"எம் அரசை இழந்தோம்... எங்கள் பிள்ளையை இழந்தோம்...எங்கள் சொத்து சுகம் எல்லாம் இழந்தோம். இனி எங்களுக்கு என்று இருக்கிறது என்று நினைக்க ஒன்றே ஒன்று தான் இருக்கிறது ...அது நல்ல கதி அல்லது சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை சொன்ன சொல்லை  இழக்க மாட்டோம் " என்று கூறினார்கள்.  அதை கேட்ட முனிவன் மதி இழந்து, சொல்ல சொல் இல்லாமல் மறைந்தான். 

பாடல்

பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த 
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்

மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்.

பொருள்

பதிஇ ழந்தனம் = அரசை இழந்தோம்

பாலனை இழந்தனம் = பிள்ளையை இழந்தோம்

படைத்த நிதி இழந்தனம் = நாங்கள் கொண்ட நிதியை இழந்தோம்

இனி நமக்குளதென நினைக்கும் = இனி எங்களுக்கு உள்ளது என்று நினைக்கும்

கதி இழக்கினும் = நல்ல கதியை இழக்கினும்

 கட்டுரை இழக்கிலேம் என்றார் = சொன்ன சொல் தவற மாட்டோம் என்றார்


மதி இழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான் = மதி இழந்து, சொல்ல     வார்த்தை  இல்லாமல் கௌசிகன் மறைந்தான்.

பாடல் சொல்லும் செய்தி என்ன ?

செய்யும் செயல் சரியானது என்று முடிவு பண்ணிவிட்டால் எத்தனை தடை  வந்தாலும், எவ்வளவு இன்னல் வந்தாலும் உறுதியாக இருக்க வேண்டும்.

உண்மை சொல்வது சரியானது என்று முடிவு செய்து  விட்டான். ஒரு இம்மி அளவும் பின்  வாங்க வில்லை. ஆனது ஆகட்டும் என்று தான் சரி என்று நினைத்த  வழியில் இறுதி வரை சென்றான்.

சின்ன சின்ன துன்பங்கள், தடைகள் வந்தாலும் துவண்டு போகிறோம். எதுத்த காரியத்தை  கை விட்டு  .விடுகிறோம்.

சிறு தோல்விகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன.

நம்மால் முடியாது என்று பின் வாங்கி விடுகிறோம்.

அது கூடாது.

பதினாலு வருடம் காட்டுக்குப் போ என்றால் சிரித்துக் கொண்டே போனான் இராமன்.

பதுமூன்று வருடம்  வனவாசம்,ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் - சரி என்று போனார்கள்   பாண்டவர்கள்.

செய்யும் செயலில் உறுதி வேண்டும். சவால்களை கண்டு துவளக் கூடாது என்று உரமூட்ட   வந்தவை இந்த கதைகள்

சொல்லித்தாருங்கள் உங்கள்  .பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும்.


No comments:

Post a Comment