Friday, October 11, 2013

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால்

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால் 


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
நல்லாருள் நாணுத் தரும்.


மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும். (மு. வ. உரை )


முதலில் மனை விழைவார் என்றால் மனைவி இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். இப்போது இல்லாள் என்று கூறுகிறார்.  இதற்க்கும் மனைவி என்று பொருள் இல்லை. வேறு ஏதாவது பொருள் இருக்குமோ ?

இதற்கு பரிமேல் அழகர் என்ன சொல்லுகிறார் ?

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை – ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் – அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். 

பெண் என்பவள் அஞ்சி நடப்பவள். அவளிடம் அஞ்சி நடப்பது என்பது ஒரு இயல்பாக இருக்க முடியாது. கணவன், மனைவிக்கு பயந்து நடந்தால், அவளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பெண்ணினால் எல்லாவிதமான குற்றங்களும் , எப்போதும் விளையும் என்கிறார் வள்ளுவர். 

பரிமேலழகரின் உரை கீழே...சந்தேகம் உள்ளவர்கள் படித்து தெளிந்து கொள்ளலாம். 

(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, ‘எஞ்ஞான்றும் நாணுத்தரும்’ என்றார்.)

இல்லாளுக்கு (மனைவிக்கு) தாழ்ந்து போகக் கூடாது 
மனைவி என்பவள் கட்டுக்குள் வைத்திருக்கப் பட வேண்டியவள். அதாவது கணவன் சொற்படி கேட்டு நடக்க வேண்டியவள்.

இந்த குறளுக்கு உங்கள் எண்ணங்களை அறிந்து கொண்ட பின், மேலும் எழுத உத்தேசம். 



1 comment:

  1. திருக்குறளின் பொருளும், பரிமேலழகர் உறையும் நன்றாகவே புரிகின்றன. ஆனால், அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டுமா என்பது நாம் முடிவு செய்ய வேண்டும்.

    பொதுவாகச் சொல்லப்போனால், பெண்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று சொல்லும் சமுதாயம் பின்பட்டதாகத்தான் இருக்கிறது (உதாரணமாக: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ...)

    இந்த திருக்குறளை யாரும் படிக்கக் கூடாது என்றோ, RS இதைப் பற்றி எழுதக் கூடாது என்றோ சொல்வது தவறு. யாரும் சொல்வதைத் தடுப்பதைவிட, சொன்னபின் அதை நமது அறிவு என்னும் உரைகல்லில் தேய்த்துப் பரிசீலித்துப் பார்ப்பது நல்லது.

    ReplyDelete