Friday, November 1, 2013

கந்தர் அலங்காரம் - புளித்த தேன்

கந்தர் அலங்காரம் - புளித்த தேன் 




பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

சில சமயம் அல்வா,  குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட்டபின் காப்பி குடித்தால் அது இனிப்பாக இருக்காது. காப்பியில் சர்க்கரை இருந்தாலும் அதற்கு முன் சாப்பிட்ட அதிக இனிப்பான பலகாரத்தால் காப்பி சுவை  குன்றுகிறது.

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது.

அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது. அப்படி என்றால் முருகன் அருள் அவ்வளவு சுவை.


பொருள்

பெரும் = பெரிய

பைம் = பசுமையான

புனத்தினுள் = திணை புனத்தில்

சிற்றேனல் = ஏனல் என்றால் கம்பு. கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் இவற்றை

காக்கின்ற = காவல் காக்கின்ற

பேதை = வெகுளிப் பென்னாணன வள்ளியின்

கொங்கை = மார்புகளை

விரும்பும் = விரும்பும்

குமரனை = குமாரனானான முருகனை

மெய் அன்பினால் = மெய் அன்பினால்

மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்ல நினைக்க

அரும்பும் = ஒரு பூ அரும்பு மெல்ல மெல்ல அரும்புவதைப் போல, மலர்வதைப் போல

தனி = தனிச் சிறப்பான

பரமானந்தம்! = பரமானந்தம்

தித்தித்தது = தித்தித்தது

அறிந்தவன்றோ! = அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து = கரும்பு துவர்த்து

செந்தேனும் புளித்து = சுவையான தேன் புளித்து

அற கைத்ததுவே = ரொம்ப கசந்து போனது

உலகத்தில் உள்ள பொருள்கள் மேல் , அனுபவங்களின் மேல் இன்பமும், சுவையும் இருந்தால்  இறை அருளின் சுவை இன்னும் அறியப் படவில்லை என்று அர்த்தம்.

இறை அனுபவம் வந்து விட்டால் இந்த உலகின் சுவைகள் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

பற்றறுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - பற்றற்றான் பற்றினை பற்றி விட்டால்.

பெரிய ஒன்று கிடைத்த பின் மற்றவை எல்லாம் சிறிதாகப் போய் விடும்.

சிந்திப்போம்


2 comments:

  1. இனிமையான பாடல். என்னிடம் ஒரு புன்முறுவலை வரவழைத்தது. ஏன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. முருகா முருகா என்றால் மற்றதை பற்றி கவலை ஏன்?

    ReplyDelete