Wednesday, November 27, 2013

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்


சீதையை காணும் ஆசை இராவணனின் மனதில் தீ போல கொளுந்து விட்டு  எரிகிறது.

அவள் உடலை காணும் ஆசை என்கிறான்  கம்பன்.

ஒரு இடத்தில் நில்லாமல், நல் வழி செல்லாமல் தாவி தாவி செல்லும் மனதை உடைய இராவணன்,  தீது என்று எண்ணாமல், சீதையை, சிறிது நேரம் கூட மறக்க  முடியாமல்,மா வடு, நெய்தல் பூ, வேல் போன்ற, சிவந்த கண்களை கொண்ட சீதையின் மேனியை காண மூளும் ஆசையால் அவன் ஆவி ரொம்ப நொந்து வருந்தினான்.

பாடல்

தாவியாது, தீது எனாது,
     தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி-
     மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி
     காண மூளும் ஆசையால்,
ஆவி சால நொந்து நொந்து, -
     அழுங்குவானும் ஆயினான்.


பொருள்

தாவியாது = தாவி தாவி செல்லும் மனது. ஒன்றில் இருக்கும் போது இன்னொன்றை நினைத்து தாவும் மனது.

தீது எனாது = தீது என்று எண்ணாமல்

தையலாளை = பெண்ணை (சீதையை)

மெய் உறப் பாவியாத போது = மனதில் நினைக்காமல் இருக்க முடியாமல்

இலாத பாவி = இருக்க முடியாத பாவி


மாழை = மாவடு

 பானல் = நெய்தல் மலர்

வேல் = கூர்மையான வேல் போன்ற

காவி = சிவந்த

ஆன கண்ணி = கண்களை கொண்ட சீதையின்

மேனி காண மூளும் ஆசையால் = உடலை காணும் ஆசையால்

ஆவி சால நொந்து நொந்து = ஆவி ரொம்ப நொந்து

அழுங்குவானும் ஆயினான் = வருந்துவானும் ஆயினான்

சீதையின் கண் = மாவடு போன்ற தோற்றம், நெய்தல் மலர் போல மணம் , மென்மை , வேல் போன்ற கூர்மை, சிவந்த நிறம்....

கண்ணே இவ்வளவு அழகு என்றால் .....?

1 comment:

  1. இராவணனின் துன்பத்தையும், அது தவறானது என்ற கருத்தையும் ஒன்று கொண்டு வந்த அழகான பாடல். நன்றி.

    ReplyDelete