Thursday, November 28, 2013

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ 


பாரதப் போரில் கர்ணன் அடி பட்டு தளர்ந்து தேரில் இருந்து விழுந்து கிடக்கிறான். அர்ஜுனன் அவன் மேல் அம்பை விட நினைக்கும் வேளையில் கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டு, தேரை விட்டு  இறங்கி, ஒரு வேதியர் வடிவில் கர்ணனை அடைகிறான்

கர்ணன்: (ஐயா தாங்கள் யார் ?)

வேதியன்: நான் மேரு மலையில் தவம் புரிபவன்

கர்ணன்: (நல்லது, இந்த போர் களத்தில் என்ன செய்கிறீர்கள்)

வேதியன்: என்னை வறுமை வாட்டுகிறது

கர்ணன்: அதற்காக இந்த யுத்த களத்தில் என்ன செய்கிறீர்கள்

வேதியன்: கர்ணா , நீ வறுமையில் வாடுபவர்களுக்கு வேண்டியதைத் தருவாய் என்று கேள்வி பட்டேன். எனவே உன்னை காண வந்தேன்.

பாடல்

தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு,
வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன்,
ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத்
                                        தளிப்பாய்,
தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால்,

சீர் பிரித்த பின்

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு 
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் மேருவில் இடை தவம் பூண்டேன் 
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்த ஒன்றை கணத்தில் அளிப்பாய் 
தூண்டிய கவனத் துரக தடம் தேர் சுடர் தரத் தோன்றிய தோன்றால் 

பொருள்

தாண்டிய = தாண்டி தாண்டி வந்து கரையில் மோதுகின்ற

தரங்கக் = அலை பாயும்

கருங் கடல் = கரிய கடலை

உடுத்த = உடையாக உடுத்திய

தரணியில் = இந்த உலகில்

தளர்ந்தவர் தமக்கு = தளர்ந்தவர்களுக்கு

வேண்டிய = வேண்டியதை

தருதி நீ = நீ தருவாய்

எனக் கேட்டேன் = என கேள்வி பட்டேன்

மேருவில் = இமய மலையில்

இடை தவம் பூண்டேன் = தவம்  கொண்டிருக்கிறேன்

ஈண்டிய = வந்து தங்கிய

வறுமை = வறுமை

பெரும் துயர் உழந்தேன் = பெரிய துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்

இயைந்த ஒன்றை = எனக்கு ஏற்ற ஒன்றை

கணத்தில் அளிப்பாய்  = இப்போதே தருவாய்

தூண்டிய = தூண்டப் பட்ட

கவனத் துரக = கதியில் செல்லும் குதிரைகளை கொண்ட

தடம் தேர் = பெரிய தேர்

சுடர் தரத் = சூரிய ஒளியில்

தோன்றிய தோன்றால் = தோன்றிய தோன்றலால்

அப்படி தனக்கு பொருள் வேண்டும் என்று கேட்ட வேதியனிடம் கர்ணன் ஒன்று  கேட்டான்.

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.









1 comment: