Monday, November 4, 2013

பெரிய புராணம் - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும்

பெரிய புராணம்  - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும் 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்று வாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனை காண எத்தனை ஆகும் ?

ஒரு பிறவி ? பல பிறவி ?

அவனைக் காண என்ன என்ன செய்ய வேண்டும் ?

ஞானம் வளர்க்க வேண்டும் ? தான தருமங்கள் செய்ய வேண்டும் ? பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் ? தவம் செய்ய வேண்டும் ?


அவ்வளவு எல்லாம் வேண்டாம்...

ஆறே நாள்...தொடங்கிய ஆறே நாளில் இறைவனை கண்டார் கண்ணப்ப நாயனார்.

பெரிய ஞானி இல்லை. தானமும் தவமும் செய்யவில்லை. படிப்பறிவு கிடையாது.

புலால் உண்பார்.

உயர் குலப் பிறப்பு கிடையாது.

நாவுகரசருக்கும், மணிவாசகருக்கும் நாள் ஆனது.

கண்ணப்ப நாயனார் ஆறே நாளில் இறைவனை அடைந்தார்.

அவர் இறைவனை அடைந்தார் என்பதை விட இறைவன் அவரை வந்து அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார். அதில் இருந்து சில பாடல்கள்.

கண்ணப்ப நாயனாரின் பெட்ரோர் பற்றிய பாடல்

பாடல்


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
 குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 
 வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்

 மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

பொருள் உரை

தவம் முற்பிறப்பில் செய்தவனாயினும் (கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகன்), இந்தப் பிறவியின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்ந்தான். சிங்கம் போல கோபம் உள்ளவன். விற் தொழிலில் வல்லவன். அவன் மனைவி தத்தை என்பவள்.

பொருள்


பெற்றியால் = தன்மையால்

தவமுன் செய்தான் ஆயினும் = முற் பிறப்பில் தவம் செய்தவனாயினும். ஏன் முற்பிறப்பில் தவம் செய்தான் என்று கூறுகிறார் ? இந்தப் பிறவியில் ஒன்றும் செய்ய வில்லை என்று தெரிகிறது. ஆனால், கண்ணப்ப நாயனார் போன்ற சிறந்த மகனை பெற்று எடுத்ததால் அவன் முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கொள்கிறார் சேக்கிழார்.

பேற்றைத் தவம் சற்றும் செய்யாத என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா  என்பார் அருணகிரி


பிறப்பின் சார்பால் = (வேடுவர் குலத்தில் வந்து பிறந்த ) பிறப்பின் சார்பால்


குற்றமே குணமா வாழ்வான் = குற்றங்கள் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்வான். உயிர் கொலை புரிவது குற்றம்.

கொடுமையே தலை நின்றுள்ளான் = கொடுமை செய்வதில் சிறந்து விளங்கினான்

வில் தொழில் விறலின் மிக்கான் = வில் தொழில் சிறந்து வெற்றி பெற்று நின்றான்

வெஞ்சின = வெம்மையான சினம் கொண்ட 

மடங்கல் = சிங்கம்

போல்வான் = போன்றவன்


மற்றவன் = அவனுடைய

குறிச்சி = குறிஞ்சி

வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் = வாழ்க்கை மனைவியும் தத்தை என்று சொல்பவள்.





1 comment:

  1. அப்படியானால், அடுத்த ஜென்மத்தில் அவன் அம்போதான்!!!

    ReplyDelete