Friday, November 8, 2013

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம்

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம் 



கிழம் இப்படித்தான் படுத்துது என்று மகளோ மருமகளோ அலுத்துக் கொள்வது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் காதில் விழுவது பற்றி அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாள் என்று தாத்தாவும் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கிறார்...கண்ணோரம் ஈரம்...

பக்கத்து மேஜையில் மருந்துகள் குமிந்து கிடக்கின்றன.....சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது என்று தாத்தா தலையை திருப்பிக் கொள்கிறார்

பாடல்


உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

சீர் பிரித்த பின்

உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்து எதிரே காட்டிய கால் - பைய
எழுந்து இருமி யான் வேண்டேன் என்னா முன் நெஞ்சே
செழுந் திரு மயானமே சேர்


பொருள் வேண்டுமா என்ன ?


1 comment:

  1. "உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார் கையைப் பிடித்து எதிரே" காட்டினால், அந்தக் கிழவர் கொடுத்து வைத்தவர் அல்லவா?

    ஆனால், கிழவரின் ஆயாசம் புரிகிறது. "இனிமேல் இருந்தால் என்ன, போனால் என்ன?" என்ற விரக்தி.

    மனதைத் தொடும் பாடல். நன்றி.

    ReplyDelete