Saturday, December 14, 2013

வில்லி பாரதம் - விஸ்வரூபம்

வில்லி பாரதம் - விஸ்வரூபம் 


கர்ணன் தன்னுடைய எல்லா புண்ணியங்களையும் தாரை வார்த்து கொடுத்த பின், கர்ணனுக்கு கண்ணன் விஸ்வ ரூப தரிசனம் தருகிறான்.

அந்த இடத்தில் சில அற்புதமான பாடல்கள்.

கர்ணன் வணங்கியவுடன் அவன் கண்கள் களிக்கும்படி, நீர் கொண்ட கரிய மேகம் வெட்கிப் போகும்படி கரிய நிறம் கொண்ட அவன் ஐந்து ஆயுதங்களை கைகளில் ஏந்தி, அன்று முதலை வாய் பட்ட கஜேந்திரன் என்ற யானைக்கு எப்படி காட்சி கொடுத்தானோ, அப்படியே தொண்டிர்நான் தோற்றமும் முடிவும் இல்லாத அவன்

பாடல்

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

பொருள்

போற்றிய = வணங்கிய

கன்னன் = கர்ணன். இரண்டு சுளி ன் போட்டால் அது கர்ணனைக்  குறிக்கும்.மூன்று சுளி ண் என்றால் அது கிருஷ்ணனை குறிக்கும்

கண்டு = கண்டு

கண் களிப்பப் = கண்கள் மகிழும் படி

புணரி = கடலில்

மொண்டெழுந்த = மொண்டு எழுந்த = முகர்ந்து எழுந்த

 கார்  முகிலை = கரிய மேகத்தை

மாற்றிய = விஞ்சிய

வடிவும் = அழகும்

பஞ்சவாயுதமும் = பஞ்ச + ஆயுதமும்

வயங்கு கைத் தலங்களுமாகிக் = விளங்குகின்ற கைத் தளங்களும் ஆகி

கூற்றுறழ்கராவின் = கூற்று + உழல் + கராவின் = கூற்றுவனை போல வந்த முதலையின்

வாயினின்றழைத்த = வாயினால் அழைத்த

 குஞ்சரராசன் = யானைகளின் அரசன் (கஜேந்திரன் )

முனன்று = முன் அன்று

தோற்றிய படியே தோற்றினான் = அன்று தோன்றியபடியே தோன்றினான்

முடிவுந் தோற்றமு மிலாத = முடிவும் தோற்றமும் இல்லாத

பைந்துளவோன் = துளசி மாலையை அணிந்தவன்

யானை அழைத்த போது வந்தவன் என்றால் என்ன அர்த்தம் ? அதில் என்ன சிறப்பு ?

இறைவன் என்பவனே மனிதர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு.

மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றும் முன், மனித மொழிகள் தோன்றும் முன், விலங்குகள் மட்டுமே இந்த பூமியில் அலைந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு யானை துன்பத்தில் அலறியபோது அதை காத்தவன் என்றால் இறைவன் மனித கற்பனையில் உதித்தவன் அல்ல என்பது கருத்து.

மனிதர்கள் தோன்றும் முன்பே இறைவன் இருந்தான், அவன் உயிர்களின் துயர் துடைத்தான் என்பது கதையின் பொருள்.



1 comment:

  1. யானையைக் காத்தவன் என்பதற்கு புதிய பொருள் கண்டேன். இனிமையான கற்பனை. நன்றி.

    ReplyDelete