Tuesday, December 10, 2013

திருக்குறள் - வினையும் மனமும்

திருக்குறள் - வினையும் மனமும் 


அவன் நல்ல பள்ளிக் கூடத்தில் படித்தான், அதனால் நிறைய மார்க்கு வாங்கினான்.

அவனுக்கு நல்ல வாத்தியார்  கிடைத்தார்,எனக்கும் அந்த மாதிரி கிடைத்தால், நானும் தான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்.

அவனுக்கு நல்ல பெண்டாட்டி கிடைத்தாள் , எனக்கும் ஒண்ணு வந்து வாய்த்ததே....

அவனுக்கு அவங்க அப்பா நாலு காசு சேர்த்து வச்சிட்டு போனாரு, அவன் அதை வச்சு முன்னுக்கு வந்துட்டான்... எங்க அப்பா எனக்கு என்னத்த வச்சிட்டு போனாரு...

இப்படி தான் வாழ்வில் முன்னேறாததற்கு எதை எல்லாமோ காரணம் சொல்லுவார்கள்.

மனிதனின் வெற்றிக்கு முதல் காரணம் அவனின்  உறுதியான மனமே...

எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற உறுதியான மனமே வெற்றிக்குக் காரணம்.

அப்பா, அம்மா, சொத்து, பள்ளிக் கூடம், வாத்தியார், மனைவி, அதிர்ஷ்டம் என்று  இவைஎல்லாம் அதற்க்குப் பின்னால் தான்.

இவையும் தேவை தான். ஆனால், மன உறுதி இல்லா விட்டால், இவை இருந்தும் பயன் இல்லை. மன உறுதி இருந்து விட்டால் , இவை இல்லாவிட்டாலும் மேலே வந்து விடலாம்.


பாடல்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்


வினைத்திட்பம்  என்ப = வினையை செய்து முடிக்கும் திண்மை என்பது

ஒருவன் = ஒருவனின்

மனத்திட்பம் = மன உறுதியை பொறுத்து அமைவது

மற்றைய எல்லாம் பிற = மற்ற விஷயங்கள் எல்லாம் , அதற்க்கு அடுத்தது தான்.

பிற என்றால் "secondary " என்று கொள்ளலாம்.

காரியத்தை செய்து முடிக்க முதலில் வேண்டியது - மன உறுதி.

மனதில் உறுதி வேண்டும் என்றான் பாரதி.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்பதும் அவன் வாக்கே.



No comments:

Post a Comment