Thursday, January 31, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் பெற்ற செல்வம்



இராமானுஜர் நூற்றந்தாதி -  நான் பெற்ற செல்வம் 


இறைவன் பெரியவனா அடியார்கள் பெரியவர்களா என்றால் எல்லா மதமும் அடியவர்கள் தான் என்று கூறும் 


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர். மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர். 

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

மற்ற மதங்களை காட்டிலும் வைணவம் ஒரு படி மேலே. அடியவர்களையும் ஆசாரியர்களையும் அது மிகவும் கொண்டாடுகிறது. 

அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம். எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும். அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...ஏன் என்றால் குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....
பாடல் 

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள் 

Wednesday, January 30, 2013

இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


நண்பர்களின் பிள்ளைகளிடம் நாம் எவ்வளவு தூரம் உரிமை எதுத்துக் கொள்ள முடியும் ?

அதிகமாக இருமை எடுத்துக் கொண்டால் முதலில் நண்பர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா ? அடுத்து அவர்களின் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்களா ?

நண்பர்களின் பிள்ளைகளை நம் பிள்ளைகள் போல் நினைத்து அவர்களை திருத்தவோ, பாராட்டவோ செய்வது என்றால் நண்பர்களுக்கு இடையே முதலில் அன்யோன்யம் வேண்டும். 

தசரதனின் நண்பன் ஜடாயு. 

சீதைக்காக, தசரதனின் மருமகளுக்காக சண்டையிட்டு உயிர் விடும் தருணத்தில் இருக்கிறான். 

இராமனும் லக்ஷ்மணனும் ஜடாயுவைப் பார்க்கிறார்கள். ஜடாயுவை தாக்கிய இராவணன் மீது இராமனுக்கு கோவம் வருகிறது. 

அப்போது ஜடாயு சொல்லுவான்....

"...ஏண்டா இராமா, ஒரு பெண்ணை தனியாக காட்டில் வைத்து விட்டு மானைப் பிடிக்கிறேன் என்று இரண்டு  பேரும் கிளம்பி விட்டீர்கள்...அப்படி ஒரு பெண்ணை தனியாக விட்டு விட்டுச் செல்வது எவ்வளவு பெரிய பிழை ? தப்பு எல்லாம் உங்க பேர்ல ... நீங்க என்னடாவென்றால் மற்றவர்கள் மேல் பிழை காண்கிறீர்கள் .."

என்று அவர்கள் மேல் உரிமையுடன் கோவித்துக் கொள்கிறான்.

இராமன் பிழை செய்தான் என்று சொல்லவும் ஒரு உரிமை வேண்டுமே ?

பாடல் 


வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

பொருள் 

திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்


திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்  


நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நடப்பதை எல்லாம் ஒரு மூவி கேமராவில் பதிவு செய்து அதை fast forward இல் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு வரும் படி எடிட் பண்ணி போட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? 

ஏதோ பிறந்த குழந்தை கிடு கிடு என்று வளர்ந்து, அங்க இங்க ஓடி கடைசியில் சுடுகாட்டில் குழிக்குள் செல்வது போல இருக்கும். 

இன்னும் கொஞ்சம் fast forward பண்ணினால் பிறந்தவுடன் நேரே ஓடிப் போய் இடு காட்டு குழிக்குள் இறங்குவது போல இருக்கும்.

மாணிக்க வாசகர் இந்த உலக வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பார்க்கிறார். 

எதுக்கு எந்த ஓட்டம் ? 

இடு காட்டுக்கு போக ஏன் இத்தனை பரபரப்பு ?

கருவறை தொடங்கி கல்லறை வரை ஒரே ஓட்டம் தான். "சாமாறே விரைகின்றேன்" என்றார். சாவதற்காக இவ்வளவு விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார்.
 
 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இறைவனை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கிறோமே என்று வருத்தப் படுகிறார்...
 
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 
பொருள் 

புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்


புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள் 


காதல் பெண்ணையும் விடுவது இல்லை.

பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.

பாடல்

காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்


Tuesday, January 29, 2013

புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள்


புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள் 

அந்த காலத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுகிறதாம்) ஒரு காதலன் அவனுடைய காதலியின் மேல் கொண்ட காதல் எப்படி படிப் படியாக வளருகிறது என்று காட்டுகிறது புறப் பொருள் வெண்பா மாலை. 

முதலில் பாடல்...பின்னால் பொருளை பார்ப்போம் 

காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள் 

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி



திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி = உடம்பும் உடம்பும் ஒன்றை ஒன்று தழுவி 

உடம்பிடை நின்ற உயிரை அறியார் = அந்த உடம்புகளுக்குள் இருக்கும் உயிரை யாரும் அறிய மாட்டார்கள்

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் = உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்

மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே = மடத்திற்குள் புகுந்த நாய் போல அங்கும் இங்கும் நோக்கம் போல மயங்கி உழலுவார்கள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி


திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 

Saturday, January 26, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே


இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே 

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென்
சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி - பொருளாக்கி என்றால் என்ன ? 

என்ன இந்த பாட்டு ரொம்ப கடினமா இருக்கே. இதற்கு பொருள் என்ன ? என்று நாம் கேட்பது உண்டு அல்லவா ? 

பொருள் தெரிந்தால் பாடல் இனிக்கும். 

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டால், வாழ்வு இனிக்கும். அர்த்தம் இல்லாமல் எப்படி வாழ்வது ?
 
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர். நம் வாழ்வின் முதல் பொருள் இறைவன். அவன் தான் உண்மை, அவன் தான் வாழ்வின் அர்த்தம். 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

என்பார் அபிராமி பட்டர். 

நம்மையும் ஒரு பொருளாக்கி, நாய் சிவிகை (பல்லக்கு) ஏற்றி வைத்து என்பது திருவாசகம் 

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவர் இராமானுஜர்


அருள் சுரந்த - சுரத்தல் என்றால் தானாகவே வருவது. சுவையான உணவைப் பார்த்தால் உமிழ் நீர் சுரக்கும். குழந்தை அழுவதைப் பார்த்தால், தாய்க்கு பால் சுரக்கும். நம் துன்பத்தைப் பார்த்தால் பெரியவர்களுக்கு நம் மேல் அருள் சுரக்கும். 

அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!
 
என்பது மணிவாசகம்.நமக்கு அருள்வதில் இறைவனுக்கும் இறைவிக்கும் போட்டி. அவளுக்கு முன்னாடி ஓடி வந்து அவன் அருள்வானாம்.

எனக்கு அருள் சுரந்த இராமானுஜனே.


முன்னைப்பழவினை வேரறுத்து - நம்முடைய பழைய வினைகளின் வேரை அறுத்து. வேரை அறுத்துவிட்டால் மீண்டும் முளைக்காது. 

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை  முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்பார் மாணிக்க வாசகர்.

வினை ஓட விடும் வடி வேல் என்பது அருணகிரி வாக்கு 

எந்தன் முன் வினைகளின் வேரை அறுத்தவன் இராமானுஜன்....

 
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன் = பன்னுதல் என்றால் புகழுதல், ஆராய்ந்து சொல்லுதல். அப்படி ஊழி முதல்வனாகிய திருமாலை பாடப் பணித்த இராமானுசன் 

பாதமுமென் சென்னித் தரிக்கவைத்தான் = அவனுடைய பாதங்களை என் தலையின் மேல் சூடிக் கொள்ள வைத்தான்

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன் என்பார் பட்டர் அபிராமி அந்தாதியில் 

திருவடிகளைப் பற்றி பேசாத பக்தி இலக்கியம் ஒன்று இல்லை. 


எனக்கேதும் சிதைவில்லையே - இராமானுஜன் பாதங்களை என் தலை மேல் சூடிக்கொண்ட பின் எனக்கு ஒரு சிதைவு இல்லை. சிதைவு என்றால் உடைத்தல், பிரிதல். ஒரு பக்கம் பொருள் ஆசை, பொன்னாசை, மண்ணாசை மறு பக்கம் இறைவன், ஆன்மீகம், பக்தி, முக்தி என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறோம். இதுவும் வேணும், அதுவும் வேணும். சில சமயம் இதன் பின்னால் போகிறோம், சில சமயம் அதன் பின்னால். ஒன்றில்லும் முழுமை கிடையாது. பிரிந்து, சிதைந்து கிடக்கிறோம். இராமானுஜன் பாதம் பட்டவுடன் சிதைவு ஒன்று இல்லாமல் மனம் ஒருமுகப் பட்டது.




Friday, January 25, 2013

சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும்


சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும் 


உலகத்தில் உள்ள பொருள்களிலேயே அருமையான பொருள் நீ என்று அமரர்கள் உன்னை தங்கள் கண்களால் கண்டு பசி ஆறுகிறார்கள்.
நீயோ, பசியே இல்லாமல், இந்த உலகம் அனைத்தையும் உண்டாய். 
அப்படியும் பசி தீர வில்லை என்று வெண்ணையை  வேறு களவாடி உண்கிறாய்.
சரி அதுதான் போனால் போகிறது என்று பார்த்தால், உண்ட வெண்ணையும் துளசியாய் மாறித் தோன்றுகிறது...தல சுத்துதுபா உன்னோட....

பாடல் 

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள் 

கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


தோழி: என்னடி, ரொம்ப dull -ஆ இருக்க ? உடம்பு கிடம்பு சரியா இல்லையா ?

அவள்: இல்லையே, நான் நல்லாதானே இருக்கேன்...

தோழி: மூஞ்சி, உன்னை பார்த்தாலே தெரியுது..என்னமோ சரி இல்ல..சொல்லு என்ன விஷயம்...

அவள்: ஒண்ணும் நேத்து அவன் கோவிச்சிக்கிட்டு போய்ட்டான்....

தோழி: அதச் சொல்லு முதல்ல...என்ன ஆச்சு...நீ என்ன சொன்ன 

அவள்: பின்ன என்ன..எப்ப பார்த்தாலும் சின்ன பையன் மாதிரி...ஒரு வயசுக்குத் தகுந்த பேச்சு வேண்டாம்...

தோழி: என்ன சொல்லிட்டானு நீ இப்படி குதிக்கிற....

அவள்: நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும்... பொழுது போகாம நம்ம friends  க கூட மண்ணு வீடு கட்டி விளையாடிகிட்டு இருந்தோம்...தொரை அப்படியே அந்த பக்கம் வந்து "...என்ன வீடு கட்டி விளையாடுறீங்களா ...நானும் வரட்டுமா வீடு கட்ட" அப்படினான்....

தோழி: அதுக்கு நீ என்ன சொன்ன ?

அவள்: இருக்க ஒரு சொந்த வீடு இல்ல...இங்க வீடு கட்ட வந்துடியாக்கும் ...அப்படின்னு சொன்னேன் 

தோழி: உனக்கு இது தேவையா ? அப்புறம் ?

அவள்: இந்தா பூ...உன் தலைல வச்சு விட்டா என்று ஆசையோடு கேட்டான்...

தோழி: சரின்னு சொல்ல வேண்டியது தானே...நீ என்ன சொன்ன ?

அவள்: யாரோ கொடுத்த பூவை கொண்டுவந்து என் தலைல ஒண்ணும் வைக்க வேண்டாம், அப்படின்னு சொன்னேன் 

தோழி: பாவம்டி அவன்...மூஞ்சியே வாடி போயிருக்குமே அவனுக்கு ...

அவள்: யாருக்கு அவனுக்கா ? ஒண்ணும் இல்ல...அதுக்கு அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா...வெட்கம் கேட்டவன்...இந்த ஆம்பிளைகளுக்கு வெட்கமே கிடையாதா...சீ சீ....

தோழி: என்ன தான் சொன்னான்...முத்தம் தரட்டுமானு கேட்டானா ?

அவள்: அப்படி கேட்டிருந்தால் கூட பரவாயில்ல...சொல்லவே என்னவோ போல இருக்கு...உன் மார்பின் மேல் என் பேரை எழுதட்டுமா ? அப்படின்னு கேக்குறான்...அவனுக்கு எழுதுறதுக்கு வேற இடமா இல்ல...சரியான ஜொள்ளு பார்ட்டி 

தோழி: உன்கிட்ட தான கேட்டான்...சரின்னு சொல்லிருக்க வேண்டியது தான....அப்புறம் நீ என்ன தான் சொன்ன ?

அவள்: எனக்கு வந்த கோவத்திற்கு....அது எல்லாம் முடியாது...கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன் 

தோழி: ஐயா உடனே கோவிச்சிக்கிட்டு போயிட்டாராக்கும் ? அம்மாவுக்கும் மூடு அவுட்டா ? 

அவள்: அவன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தானே ? நீ என்ன சொல்ற ?

தோழி: நான் என்ன சொல்ல...சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப வந்து என் கிட்ட யோசனை கேக்குற...

அவள்: எனக்காக அவன் கிட்ட சொல்லி, முறைப்படி எங்க வீட்டுல வந்து பொண்ணு கேக்க சொல்லுவியா...ப்ளீஸ் டி...எனக்காக....

(சொன்னா  நம்பணும்...இது கலித்தொகையில் வரும் பாடல்....பாடல் கீழே...)
 
 
 
   

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

Wednesday, January 23, 2013

சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


அன்று வடக்கில் உள்ள மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, பாற்கடலை கலக்கினாய். ஆனால் இன்றோ யசோதையின் சின்ன கயிற்றால் கட்டப்பட்டு கிடக்கிறாய். இது என்ன மாயம் ?

பாடல் 

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;

பொருள் 

பிரபந்தம் - பழுதான கடந்த காலம்


பிரபந்தம் - பழுதான கடந்த காலம் 


நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ?

என்ன சாதித்தோம் ? பிறந்தோம், வளர்ந்தோம், ஏதோ கொஞ்சம் படித்தோம், வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள்....வெளியே சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா ? 

பணம் காசு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, என்னனமோ செய்கிறோம். பணத்தாசையை தாண்டி பெண்ணாசை. 

எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஊமை கனவு கண்டால் அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்ல முடியாமல் தவிப்பானோ, அதை விட மோசமாக இருக்கும் நம் வாழ்க்கை. 

வாழ் நாட்கள் எப்படியோ ஓடி விட்டன. மீதி நாட்களை எப்படி உருப்படியாகச் செலவழிப்பது ? இந்த சுழலில் இருந்து நாம் விடுபட என்ன வழி ? உய்வதற்கு நாராயாணா என்ற நாமத்தை கண்டு கொண்டதாக நம்மாழ்வார் சொல்கிறார்.

பாடல்

சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள் தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.


பொருள் 

தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன்


தேவாரம் - தாமரையின் கீழ் ஒளிந்து கொள்ளும் மீன் 


திரு ஞானசம்பந்தர் மிக இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று பாடத் தொடங்கினார் 

திருவெண்காடு !

ஒரு சிறிய கிராமம். அமைதியான ஊர். ஊரின் நடுவே ஒரு கோவில். கோவிலுக்கு அருகே குளம். சில்லென்ற நீர் நிறைந்த குளம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாமரை மலர்கள் இருக்கின்றன. தாமரையோடு சேர்ந்து தாழை மலர்களும் அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கின்றன.  சூரிய ஒளி பட்டு அந்த தாழை மலர்கள் மெல்ல விரிகின்றன. அவை அப்படியே காற்றில் அசைகின்றன.  அப்படி அசையும் போது, அவற்றின்  நிழல் குளத்தில் விழுகிறது. அந்த குளத்தில் உள்ள மீன்கள் அங்கும் இங்கும் அலைகின்றன. 

இவ்வளவு தாங்க இருக்கு. நீங்களும் நானும் பார்த்தால், ஆஹா என்ன ஒரு இனிமையான இடம் என்று இரசித்து விட்டும் வருவோம்.

ஞான சம்பந்தர், இளம் ஞானி. பார்க்கிறார். 

அவருக்கு என்ன தோன்றுகிறது பாருங்கள்.  

மடல் விரியும் தாழை மலரின் நிழலை அந்த குளத்தில் உள்ள மீன்கள் பார்க்கின்றன. அந்த மீன்களுக்கு அந்த நிழல் ஏதோ அவைகளைப் பிடிக்க வரும் குருகு (ஒரு வித பறவை) போல் இருக்கிறது. அந்த குருகுக்கு பயந்து, அந்த மீன்கள்  தாமரை மலரின் அடியில் ஒளிந்து கொள்கின்றன. இதைப் பார்த்து அங்குள்ள கடல் முத்துகள் சிரிக்கின்றன. அப்படிப் பட்ட ஊர் திருவெண்காடு. 
 

பாடல் 
  
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

பொருள்

Tuesday, January 22, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார்


இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார் 


இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்தரமான ஒன்று. 

நம்முடைய மனம் தான். இருந்தும் நாம் சொல்வதை கேட்பது இல்லை. 

பார்க்காதே என்றால் பார்க்கும். தொடாதே என்றால் தொடும். இருப்பதை விட்டு விட்டு இல்லாததற்குப் பறக்கும். 

மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால், அது நம்மை அடக்க முயற்சி செய்கிறது. 

மனம் நம்மை நல்ல வழியிலும் இழுத்துச் செல்லும், கெட்ட வழியிலும் இழுத்துச் செல்லலாம்.

மனதை வலு கட்டாயாமாக ஒரு வழியில் செலுத்தினால், நிச்சயம் அது நம் கட்டுபாட்டை மீறி எதிர் திசையில் ஓடும். 

அதை, அதன் வழியில் போய், கொஞ்சம் கொஞ்சமாக நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். 
 
அமுதனார் சொல்கிறார், 

என் மனமே, உன்னை நான் அடி பணிகிறேன். கெட்ட பசங்க சவகாசத்தை விடுத்து, இராமானுஜரின் மேல் அன்பு செய்யும் நல்லவர்களின் திருவடிக்கீழ் என்னை கொண்டு சேர்த்ததற்கு 

பாடல் 

பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள் 

Monday, January 21, 2013

அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


பெற்ற பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்கா விட்டால் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவது இல்லை. எப்படியாவது அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்வோம். மானிடர்களான நமக்கே நம் குழந்தைகள் மேல் இவ்வளவு பாசம் இருந்தால், அபிராமிக்கு அவளுடைய பிள்ளைகளான நம் மீது எவ்வளவு பாசம் இருக்கும் ?

அவள் தான் எல்லாம் என்று தெரியும், அவளைத்தான் அடைய வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும், அவள் மேல் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு வேறு எதை எல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், அவள் நம் மேல் கோபப்படாமல், நம் மேல் அன்பு செலுத்துகிறாள். அவளின் கருணைக்கு எல்லை ஏது ?


பாடல் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள் 

வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


தன்னை மணந்து கொள்ளும்படி கங்கையிடம் சந்துனு மகாராஜா வேண்டினான். அதற்க்கு கங்கை என்ன சொன்னாள்?

முதலில் அவளுக்கு வெட்கம் வந்தது. வெட்கத்தால் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். தலை கவிழ்ந்தாள் என்றால் என்னமோ லேசாக தலையயை சாய்த்தாள் என்று பொருள் அல்ல. அவள் நாடி வளைந்து உடலை தொடுகிறது.  ஆபரணங்கள்  பூண்ட அவளது மார்பகத்தை அவளே பார்க்கும் அளவுக்கு  தலை கவிழ்ந்தாள். அப்படி அவள் வெட்கப் பட்ட போது, அவளின் அழகு இன்னும் கூடியது.. வெட்கப் படும் போது பெண்கள் மேலும் அழகாகத் தோன்றுவது இயற்கை. அவள் உடல் மின்னியது. அவள் உடல் மேலும் மெருகேறியது.  அந்த நிலவே அவள் மேனியின் ஒளியைப் பெற்று பிரகாசித்ததை போல இருந்தது. 

வில்லி புத்துராரின் பாடல் 

நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.

பொருள் 

இராமாயணம் - உயிரின் ருசி


இராமாயணம் - உயிரின் ருசி 


இராவணன் ஆட்சிக்கு வந்தபின், அரக்கர்களின் உயிரை குடிக்க (அது என்ன திரவமா குடிக்க ?) எமன் அஞ்சினான். எங்கே அரக்கர்களின் உயிரை எடுத்தால், இராவணன் தன்  உயிரை எடுத்து விடுவானோ என்று அஞ்சி அரக்கர்களின் உயிரை எடுக்காமல் இருந்தான்.

விச்வாமித்ரனின் தூண்டுதலால், இராமன் தாடகை என்ற அரக்கியை கொன்றான். 

அன்று தான் கூற்றுவனும் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு அரக்கர்களின் உயிரின் சுவையை சிறிது அறிந்தான்...பின்னால் பெரிய விருந்து அவனுக்கு வரக் காத்து இருக்கிறது....

பாடல்


வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே.

பொருள்

Sunday, January 20, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்


குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு. 

ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன. 

அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை. 

அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....



காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

காதலர் உழையராக பெரிது உவந்து 
சாறு கொள் ஊரிற் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அந்த குடி சீறூர் 
மக்கள் போகிய அணில் ஆடும்  முன்றில் 
புல்லப்பு இல் போல  புல்லென்று 
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே 

பொருள் 

Saturday, January 19, 2013

இராமாயணம் - சிவந்த பாதங்கள்


இராமாயணம் - சிவந்த பாதங்கள்


உங்கள் வீட்டில் இருந்து பேருந்து நிலையமோ, புகை வண்டி நிலையமோ ஒரு ஐந்து  கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

சாதரணமாக நடந்து போனால் சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். அவ்வளவா கால் வலிக்காது.

அதையே முக்கால் மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். மூச்சு வாங்கும். கொஞ்சம் வியர்க்கும்.

அதையே அரை மணி நேரத்தில் போய் சேர வேண்டும் என்றால், ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். கால் வலிக்கும். ரொம்ப மூச்சு வாங்கும். வியர்த்து கொட்டும்.

இன்னும் குறைத்து கால் மணி நேரத்தில் போக வேண்டும் என்றால், தலை தெறிக்க ஓட வேண்டும். காலுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும். கால் எல்லாம் சிவந்து விடும். இல்லையா ?

யோசித்துப் பாருங்கள், இந்த பூலோகம் முழுவதையும், அந்த வானுலகையும் இரண்டே அடியில் நடந்து கடப்பதாய் இருந்தால் எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கால் வலிக்காது அந்த புவி அளந்த பெருமாளுக்கு ? வைகுண்ட வாசனுக்கு ?

கம்பரின் பாடலைப் பாருங்கள் ....


"உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!


பொருள்


Friday, January 18, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது


இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது 


வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும். 

நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள். 

இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு. 

கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள். 

அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. 

யாரோடு சேர வேண்டும் ?  

நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...

பாடல்  

கள்ளார்பொழில் தென்னரங்கன்  கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி  குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு  ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.

சீர் பிரித்த பின் 

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ் 
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால் 
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே 

பொருள் 

Thursday, January 17, 2013

கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று


கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று 


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.


அருணகிரி நாதர் பாடல் என்றால் பதம் பிரிக்காமல் படித்து அறிய முடியாது. 

சீர் பிரித்த பின் 

குறியை குறியாது குறித்து அறியும் 
நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று உலகோடு உரை சிந்தையும் அற்று 
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 

பொருள் 

Tuesday, January 15, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி


இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி 


என் நாவில் ஏதேதோ தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. பொய், புறம் சொல்லுவது, முகஸ்துதி சொல்லுவது, பயனற்ற விஷயங்களைப் பேசுவது என்று தேவை இல்லாமால் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறது என் நாக்கு. 

இராமானுசரே, எனக்க ஒரே ஒரு வேண்டுகோள் தான் உண்டு. இரவும் பகலும் உன் நாமம் மட்டும் என் நாவில் தங்கி இருக்கும்படி செய்து விடும்...வேறு எதுவும் வேண்டாம்....

எங்கே நாவில் நாமம் நின்றால், ஒரு வேலை நடந்து எங்காவது போய் விடுமோ என்று அஞ்சி, நாமம் அமரும் படி வேண்டுகிறார். 

பாடல்

சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

சீர் பிரித்த பின் 

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்கு தொண்டு செய்யும் 
நல்ல அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே 
அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்
வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே

பொருள்

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்


Monday, January 14, 2013

திருமந்திரம் - புலன்களை அடக்காதீர்கள்


திரு மந்திரம் - புலன்களை அடக்காதீர்கள் 


மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும் நம்மை படாத பாடு படுத்துகின்றன. 

பார்ப்பது எல்லாம் வேண்டும் என்கிறது மனம்.

ருசியானவற்றை கண்டால் ஜொள்ளு விடுகிறது நாக்கு,  

சினிமா பார்க்க வேண்டும், புதுப் புது இடங்களை பார்க்க வேண்டும் என்று கண் அலை பாய்கிறது

பாடலை, இசையையை கேட்க வேண்டும் என்று காது ஆசைப் படுகிறது....

ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

ஆனால், ஐம்புலன்களை அடக்க முடியுமா ? அடக்கியபின் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

திருமூலர் ரொம்ப ப்ராக்டிகலான ஆளு. 

பாடல் 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,
அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)
அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

பொருள்

Sunday, January 13, 2013

இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம்


இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம் 


நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!



நயம் தரும் பேரின்பம் எல்லாம் பழுது என்று - பேரின்பம் எப்படி பழுது ஆகும் ?

நிறைய வியாக்கியானங்கள் எழுதப்பட்டு உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம். 

1. பெரியவர்கள் தீயவை, தீமை, சிற்றின்பம் போன்றவற்றை நேரடியாகச் சொல்வது இல்லை. தீய நெறியை 

நெறி அல்லாத நெறி தன்னை 
நெறியாகக் கொள்வேனே 
சிறு நெறிகள் சேராமே 
பெறு நெறியே சேரும் வண்ணம் 
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு யார் தருவார் அச்சோவே என்று பாடுகிறார் மணிவாசகர்.

தீ நெறி என்று சொல்லவில்லை....நெறி அல்லாத நெறி என்று குறிப்பிடுகிறார். 

கொடிய நஞ்சு உள்ள பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம் அல்லவா "? அது போல் இங்கே மங்கலமாக புலன் இன்பத்தை பேரின்பம் என்று குறிப்பிட்டார்.

2. பேரின்பம் என்றால் முக்தி, வீடு பேறு, சொர்க்கம் என்று சொல்லலாம். இறைவன் அடியாருக்கு அது எல்லாம் பழுது தான். அவர்களுக்கு மிகுந்த விருப்பம் உள்ளது அவன் அழகில் தோய்வதுதான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே 

என்று சொர்கமும், முக்தியும், இந்திர லோகமும் வேண்டாம் என்று அவனை கண்டு கழிப்பதிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்து விடுகிறது. 

3. பேரின்பம் அடைய வேதங்களும் சாஸ்திரங்களும் ஞான, கர்ம, பக்தி மார்கங்களை காட்டுகின்றன. வைணவ அடியார்கள் அதை எல்லாம் பழுது என்று விட்டுட்டு ஆச்சாரியன் திருவடிகளே சரணம் என்று இருந்து விடுவார்கள். 

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை....

Saturday, January 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள்


இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள் 

நல்லது என்று தெரிந்தாலும் இந்த மனம் அதை விட்டு விட்டு மற்றவற்றின் பின் செல்கிறது. சொன்னால் எங்கே கேட்கிறது. கேட்டாலும் ஒரு கணம் கேட்க்கும் அடுத்த கணம் குரங்கு போல் வேறொன்றுக்குத்  தாவி விடும். எனவே, ஏ மனமே, நான் சொல்வதை கேளு, திருவரங்கத்து அமூதனார் பாடிய இராமானுஜர் நூற்றந்தாதியை ஒழுங்காகப் படி என்று வேண்டுகிறார் வேதப் பிரகாசர். 


பாடல்  

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

பொருள்.....