Sunday, January 19, 2014

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம்

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம் 



உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!


அவன் பொருள் தேட வெளி நாடு செல்ல விரும்புகிறான். அவனுடைய காதலி தானும் கூட வருவேன் என்கிறாள். அவனுக்கு அவளை அழைத்துச் செல்ல .விருப்பம் இல்லை. அவன் கையில் காசு இல்லை. அவனே எப்படியோ அங்கே இங்கே தங்கி எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவளை வேறு எப்படி கூட்டிக் கொண்டு  என்று அவன் தயங்குகிறான். செல்லும் வழி வேறு கடினமான பாதை. இன்று போல் அன்று வாகன வசதி கிடையாது. 

சுட்டெரிக்கும் வெயில். பாதம் சுடும் மணல். 

பசியும் தாகமும் அழையா விருந்தாளியாக கூடவே வரும்.

செல்லமாக வளர்ந்த பெண் அவள். இதை எல்லாம் தாங்குவாளா ? என்று அவன் யோசிக்கிறான். 

அவளுக்கும் புரிகிறது. இருந்தாலும் அவன் கூட செல்ல வேண்டும் என்ற விருப்பம் நாய் குட்டியாக காலை சுற்றி சுற்றி வருகிறது. 

தன் தோழியிடம் சொல்லி அவனை தன்னையும் அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறாள். 

தோழி வந்து தலைவனிடம் சொல்லுகிறாள்...

"நீ நினைப்பது சரிதான். பாலை நிலம் கொடுமையானது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீ போன பின் அவள் தனியாக இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்று  நினைக்கிறாய் ? வணிகர்கள் ஒன்று கூடி வியாபரத்திற்காக ஊர் கோடியில் கூடாரம் அடித்து , தங்குவார்கள். வணிகம் நடக்கும். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். வாங்குவதும் , கொடுப்பதும் ஒரே குதூகலமாய் இருக்கும். இராட்டினம், இசை, உணவு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், வண்டி கட்டிக் கொண்டு வருபவர்கள் என்று ஒரே கொண்டாட்டமாய்  இருக்கும். பொருள் எல்லாம் விற்று தீர்ந்தவுடன், இடத்தை காலி செய்து விட்டு போய்  விடுவார்கள். அந்த இடமே வெறிச்சோடி போய் விடும். அது போல நீ போன பின், அவள் இருக்கும் வீடு வெறிச்சோடிப் போய் விடும்.  எனவே,அவளையும் கூட்டிக் கொண்டு போ"  என்கிறாள். 

பொருள் 

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து 

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின் 

மருங்கின் = இடத்தின் 

அகன்தலை = விலகிய இடத்தில் 

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல 

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு 

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால் 

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே 

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே ?



1 comment:

  1. "நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?" என்று சீதை கம்பராமாயணத்தில் இராமனைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது.

    அருமையான பாடல். வணிகர் வந்து சென்ற மைதானம் என்பது அருமையான உவமை.

    நன்றி.

    ReplyDelete