Wednesday, January 8, 2014

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே 


அது ஒரு கடற்கரையில் உள்ள சின்ன கிராமம் அல்லது சேரி. நீண்ட மணர் பரப்பு. அங்கங்கே புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றின் கிளைகள் தாழ்ந்து வளைந்து தரையை தொடுகின்றன. அதற்குள் யாரும் நின்றால் வெளியில் அவ்வளவாக தெரியாது. அந்த மரங்களில் சில பறவைகள் இருக்கின்றன.

அவனும் அவளும் அங்குதான் சந்தித்துக் கொள்வார்கள்.

மெத்தென்ற மணல் பரப்பு. தலை கோதும் கடற் காற்று. மடி தாங்கும்  புன்னை மரம். அழகான அவள். மேலும் அவன்.

ஆனால் இப்போ கொஞ்ச நாளாய் அவன் அவளை கண்டு கொள்வது இல்லை. வருவதும் இல்லை. பார்ப்பதும் இல்லை. அவளுக்கு கவலை. தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள்.

தோழி, தலைவனிடம் சென்று கூறுகிறாள்.

"நீ அவளை கை விட்டு விடும் நாளும் வந்து விடும் போல் இருக்கிறது. ஒரு வேளை நீ அப்படி அவளை கை விட்டு விட்டால், நீ அவளை சந்திப்பதற்கு முன் எப்படி இருந்தாளோ அப்படியே அவளை திருப்பிக் கொடு " என்று அவனிடம் சண்டை பிடிக்கிறாள்.


பாடல்

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.


பொருள்


விட்டென விடுக்கும் நாள் வருக = நீ அவளை விட்டு விட்டு செல்லும் நாளும் வருக. அதாவது, அந்த நாளும் வந்து விடும் போல இருக்கிறது. அப்படி என்றால், அது வரட்டும். 

அது நீ = அதை நீ

நேர்ந்தனை ஆயின் = விரும்புவாய் ஆயின்

தந்தனை சென்மோ! = தந்து விட்டு செல்

குன்றத்தன்ன = குன்று போல

குவவு மணல் அடைகரை = குவிந்த மணலை கொண்ட கரையில்

நின்ற புன்னை  = நிற்கின்ற புன்னை மரங்கள்

நிலம் தோய் படு சினை = நிலம் தொடும் கிளைகள் (சினை = கிளை)

வம்ப நாரை சேக்கும் = இளைய நாரை (ஒரு வித பறவை) வந்து இருக்கும்

தண் கடற் சேர்ப்ப! = குளிர்ந்த கடலை கொண்ட தலைவனே

நீ உண்ட என் நலனே. = நீ அனுபவித்த எம் நலனே


ஏன் இந்த நாரையை இங்கு சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்....

நாரை ஒரு வித  மீன் கொத்தி பறவை. கடலுக்குச் செல்லாமால் நிலத்தில் மரக் கிளையில்  உட்கார்ந்து இருக்கிறது. அதற்கு உண்ண பிடிக்க வில்லை. பறக்க பிடிக்கவில்லை. தனியாக , மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அந்த தலைவியைப் போல. 

நீயும், என் தலைவியும் கூடி இருந்த போது இந்த நாரை சாட்சியாக இருந்திருக்கும். ஞாபகம் இருக்கிறதா ?

இந்த முட்டாள் நாரை கடலுக்கு சென்று, ஆனந்தமாக பறந்து , மீன் பிடித்து உண்பதை விட்டு விட்டு இப்படி மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அது போல நீயும் முட்டாள் தனமாக  என் தலைவியை விட்டு விட்டு தனியாக இருக்கப் போகிறாய். 

என்று அந்த தனிமையான நாரை பல பொருள்களை உணர்த்திக் கொண்டு இருக்கிறது. 

காலம் பல கடந்தும் , அந்த நாரையின் ஒற்றை விழி இன்றும் நம்மை பார்பதை நாம் உணர முடியும். 

குறுந்தொகை !


1 comment:

  1. "என் நலனே" என்று சொல்வதால், இந்தப் பாடலை தலைவியே கூறுவதாகக் கொள்ளலாமோ?

    நாரை பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது.

    "நீ உண்ட" - ஒரு பொருளை உண்டுவிட்டால், அது இருக்காதல்லவா? அது போல, தலைவன் உண்டுவிட்டான் அவள் நலனை!

    நல்ல பாடல். நன்றி.

    ReplyDelete