Saturday, February 1, 2014

நாலடியார் - தனிமை

நாலடியார் - தனிமை 


வயதாகும்.

பிள்ளைகள் எங்கெங்கோ போய் விடுவார்கள்.

நண்பர்களுக்கும் வயதாகி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியுமோ இல்லையோ.

உறவினர், தெரிந்தவர், உடன் வேலை பார்த்தவர் என்று யாரும் உடன் இல்லாத் தனிமை வந்து சேரும்.

வாழ்க்கையில் அதுவரை செய்தது என்ன, மனைவியும், பிள்ளைகளும் என்ன, உறவு நட்பு இது எல்லாம் என்ன என்று மனம் தனிமையில் இருந்து சிந்திக்கும்.

சிந்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

வாழ்வின் வெறுமையை, தனிமையை சோகம் ததும்பச் சொல்கிறது நாலடியார்


பாடல்

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி

பொருள் 

நட்பு நார் அற்றன = பூவை நார் கட்டி மாலை ஆக்குவது போல, நட்பு என்ற நார் நம்மை பிணித்து வைக்கும். அந்த நாரும் ஒரு நாள் அற்றுப் போய் விடும். நண்பர்கள் போய் விடுவார்கள்.

 நல்லாரும் அஃகினார் = நம் கூட பழகி , கூட இருந்த நல்லவர்களும் நம் வாழ்வில் இல்லாமல் போய் விடுவார்கள். கெட்டவர்கள் போனால் என்ன கவலை. நல்லவர்கள் போய் விடுவார்கள்.


அற்புத் தளையும் அவிழ்ந்தன = அன்பு என்பது இங்கு அற்பு என திரிந்து வந்தது. அன்புத்  தளையும் அவிழ்த்து என்று படிக்க வேண்டும். நம்மிடம் அன்பு கொண்டவர்களும் இல்லாமல் போவார்கள். அவர்களே இல்லாமல் போகலாம் அல்லது அவர்களின் அன்பு இல்லாமல் போகலாம். 


 உட்காணாய் = உள் காணாய். உள் நோக்கிப் பார். தன்னைத் தான் அறி

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? = வாழ்க்கையின் பொருள் என்ன ? அர்த்தம் என்ன ?

வந்ததே = வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி = கடலில் செல்லும் கப்பல் போன்ற துன்பம். கப்பல் முதலில் தெரியாது, பின்னர் சின்ன புள்ளி போலத் தெரியும், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வரும், கடைசியில் மிகப் பெரிதாக கிட்டே வந்து நிற்கும். இவ்வளவு பெரிய கப்பலா என்று பிரமிக்க வைக்கும். வாழ்வில் தனிமை என்ற  துன்பம் இப்போது தெரியாது. கிட்ட வரும்போது தெரியும்.



1 comment:

  1. என்ன ஒரு அழகான, பொருள் நிறைந்த, நெஞ்சைத் தொடும் பாடல்!

    இந்தத் தனிமையை சமாளிக்க வழி என்ன? அதற்க்கு வேறு ஏதாவது பாடல் இருக்கிறதா? ("கடவுளை நினை" என்று சொல்லாத பாடல் வேண்டும்!)

    ReplyDelete