Tuesday, February 11, 2014

நாச்சியார் திருமொழி - அவனை இங்கே வரச்சொல்

நாச்சியார் திருமொழி - அவனை இங்கே வரச்சொல் 


பக்தி - காதல், இரண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் ஒன்றும் இல்லை.

பக்தி இறைவனை நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லும்.

கோவில், குளங்கள் என்று அவனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். பக்தி செலுத்துங்கள். இறைவன் உங்களைத் தேடி வருவான்.

கோதை கொஞ்சுகிறாள். 

குயிலிடம் தூது விடுகிறாள்


"ஏ குயிலே , அவனை நான் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் என் கண்கள் தூங்கவே இல்லை. அந்த உலகலந்தானை இங்கே வரச் சொல். நீ அப்படி சொன்னால், உனக்கு அடிசில், பால் அமுது போன்றவற்றை தருவேன். அது மட்டும் அல்ல, அப்படி நீ கூவினால், என் வீட்டில் வளரும் கிளியை உனக்கு நட்பாக அறிமுகம் செய்து வைப்பேன்..."


பாடல்


மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்

சீர் பிரித்த பின்

மென் நடை அன்னம்  பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் 
பொன் அடி காண்பதோர் ஆசயினால் என் பொரு கயற் கண் இணை துஞ்சா
இன் அடிசிலோடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகு அளந்தான் வரக் கூவாய்

பொருள்

மென் நடை = மென்மையான நடையைக் கொண்ட
அன்னம்  =அன்னங்கள்
பரந்து விளையாடும் = எங்கும் விளையாடும்
வில்லிபுத்தூர் = ஸ்ரீ வில்லிபுத்தூர்

உறைவான் தன் = இருப்பவனின்

பொன் அடி = பொன் போன்ற திருவடிகளை

காண்பதோர் = காணவேண்டும் என்ற

ஆசையினால் = ஆசையினால்

என் = என்னுடைய

பொரு = ஒன்றோடு ஒன்று பொருந்திய

கயற் = மீன் போன்ற

கண் இணை = இரண்டு கண்களும்

துஞ்சா = தூங்க மாட்டேன் என்கின்றன

இன் அடிசிலோடு = இனிமையான அடிசிலொடு

பால் அமுது = பால் சோறு

 ஊட்டி எடுத்த = ஊட்டி வளர்த்த

என் கோலக் கிளியை = என் வீட்டில் வளரும் இனிய கிளியை

உன்னொடு தோழமை கொள்வன் = உனக்கு நட்பாக செய்து தருவேன்

குயிலே = குயிலே

உலகு அளந்தான் வரக் கூவாய் = உலகு அளந்தான் வரக் கூவுவாய்

ஆண்டாள் வீட்டில் இருந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் ரொம்ப பக்கமாகத் தான்  இருந்திருக்கும். அவளின் தந்தை அந்த கோவிலில் பணி செய்கிறார். அவள் நினைத்தால் கோவிலிலேயே சென்று அவனைப் பார்த்து இருக்கலாம்.

அதெல்லாம் வேண்டாமாம், அவனை இங்கே வரச் சொல் என்கிறாள்.

அவன் வேண்டுமானால் உலகளந்த பெருமானாக இருக்கலாம். எனக்கு அவன் காதலன். என் வீட்டுக்கு அவனை வரச் சொல் என்கிறாள்.

காதல் கடவுளையும் உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் வள்ளலார்

உலகம் முழுவதும் காதலால் நிறைந்து இருப்பதை கண்டார் திரு நாவுக்கரசர்.

மனிதர்கள் மட்டும் அல்ல. விலங்குகளும் காதல் கொள்கின்றன. அந்த அன்பில், அந்த காதலில் இந்த உலகமே இன்பத்தில் நிறைந்து இருப்பதைக் கண்டார் நாவுக்கரசர். அந்த காதலே இறைவன் என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

காதலியுங்கள்.

கஷ்டமா என்ன ?   



1 comment:

  1. இறைவன் என்ற ஒரு நபரை, concept-ஐ எப்படித்தான் காதலிக்க முடியுமோ, எனக்குத் தெரியவில்லை! ஆனால் என்ன அழகான பாடல்! நன்றி.

    ReplyDelete