Thursday, February 13, 2014

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே 



இறைவன் திருவடியில் இருக்க வேண்டும், பரம பதம் போக வேண்டும், வைகுண்டம் போக வேண்டும், கைலாசம் போக வேண்டும் என்று பக்தி செய்வார்கள்.

நாளையே இறைவன் அவர்கள் முன் வந்து, "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம், கிளம்பு என்னோடு, நீ விரும்பிய அந்த இடத்துக்கு போகலாம் " என்று கூப்பிட்டால் எத்தனை பேர் கிளம்பிப் போவார்கள் ?

"வர்றேன்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன்...பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி வருவது, பிள்ளைகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டு வருகிறேன், நான் இல்லாம என் பெண்டாட்டி தனியாக எப்படி குடும்பத்தை சமாளிப்பாள், அவளுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன்...." என்று சொல்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.


குடும்ப பொறுப்பு ஒரு புறம் இருந்தாலும், இந்த உலகை விட்டு போக ஆசை இல்லை. எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும், இதில் ஒரு சுகம் இருக்கிறது.

எத்தனை ஆயிரம் அற நூல்கள் வந்து  விட்டன.ஒன்றை ஒழுங்காக கடைப் பிடித்திருந்தால் கூட எவ்வளவோ உயர்ந்திருப்போம். "...படிக்க நல்லாத்தான் இருக்கு....இது எல்லாம் நடை முறைக்கு சரிப் பட்டு வராது " என்று நாம் நம் வழியில் போய்  விடுகிறோம்.

மாணிக்க வாசகர் இந்தப் போராட்டத்தை படம்  பிடிக்கிறார்.

இறைவன் தெரிகிறது. அவன் அருள் தெரிகிறது. அது வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், உலகப் பற்றை விட முடியவில்லை.  தவிக்கிறார்.

பாடல்

களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

பொருள் 


களி வந்த சிந்தையொடு = மகிழ்ச்சியான  மனதுடன்.மனதுடன்

உன் கழல் கண்டும் = உன் திருவடிகளை கண்டும் 

கலந்தருள = கலந்து உன் அருளைப் பெற

வெளி வந்திலேனை = இந்த உலகப் பாசங்களை விட்டு வெளியே வராத என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

மெய்ச் சுடருக்கு = உண்மையான ஒளிக்கு

எல்லாம் ஒளிவந்த பூம் கழல் = எல்லாம் ஒளி தரும் திருவடிகளை உடைய

 உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

எளிவந்த எந்தை பிரான் = உன்னை அடைவது ஒன்றும் ரொம்ப கடினம் இல்லை. நீ மிக எளிமையானவன். என் தந்தை போன்றவன். என்னை விட்டு என்றும்  பிரியாதவன்.

என்னை ஆளுடை என் அப்பனே! = என்னை ஆண்டு கொள் என் தந்தை போன்றவனே

நானே வர மாட்டேன். நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொள்.  என்னை விட்டால் , இந்த உலகிலேயே கிடந்து உழன்று கொண்டிருப்பேன். எப்படியாவது  என்னை ஆண்டு கொள்.



1 comment:

  1. நெஞ்சைத் தொடும் பாடல். நன்றி.

    ReplyDelete