Friday, February 14, 2014

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு 



ஆண்டாள் குயிலை தூது போகச் சொல்கிறாள்.

குயில் கேட்கிறது, உனக்காக நான் தூது போனால் எனக்கு என்ன இலாபம் என்று.

ஆண்டாள் சொல்கிறாள், "யாரிடமும் சொல்லாதே, எனக்கும் அவனுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அது வேறு யாருக்கும் தெரியாது. நானும் அவனும் மட்டுமே அறிந்த இரகசியம். நீ அவனை இங்கே வரச் சொன்னால், நான் அவனை என்ன செய்கிறேன் என்பதை நீ காணலாம் "

என்ன செய்வாள் கோதை ? அவனோடு சண்டை பிடிப்பாளோ ? ஊடல் கொள்வாளோ? கூடலும் கொள்வாளோ? என்ன செய்வேன் என்று சொல்லவில்லை.

குயிலின் (நமது) கற்பனைக்கு விடுகிறாள்...


பாடல்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்  அவனைநான் செய்வன காணே

சீர் பிரித்த பின்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் 
நாங்கள் எம் இல் இருந்து ஓட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும் 
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி யாகில்  அவனை நான் செய்வன காணே

பொருள்

சார்ங்கம் = சார்ங்கம் என்ற வில்லை

(ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
)



வளைய = வளையும்படி

வலிக்கும் = நாண்  ஏற்றும்

தடக்கைச் = பெரிய கைகள் 

சதுரன் = திறமையானவன் . அவன் இங்கே வர வேண்டும் என்று நினைத்தால் அது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை அவனுக்கு. பெரிய வீரன். சாமர்தியமானவன் என்று சொல்லாமல் சொல்கிறாள் கோதை.

பொருத்தம் உடையன் = எனக்கு நல்ல பொருத்தம் உடையவன்

நாங்கள் = நாங்கள் (நானும் அவனும் )

எம் = எங்களுடைய

இல் = இலத்தில், வீட்டில்

இருந்து = இருந்து

ஓட்டிய = செய்து கொண்ட

கச்சங்கம் = இரகசிய ஒப்பந்தம்

 நானும் அவனும் அறிதும் = நானும் அவனும் மட்டும் அறிவோம்

தேங்கனி = தேன் போல் இனிக்கும் கனிகள்

மாம்பொழில் = மாங்கனிகள் நிறைந்த

செந்தளிர் = மரத்தில் உள்ள சிவந்த தளிர்களை

கோதும் = கொத்தும் (என் அவஸ்தை உனக்கு புரிய மாட்டேன் என்கிறது குயிலே. நீ பாட்டுக்கு மரத்துல உக்காந்துகிட்டு இந்த இலைகளை கோதிக் கொண்டு இருக்கிறாய்)

சிறு குயிலே = சிறு குயிலே

திருமாலை = திருமாலை


ஆங்கு = இங்கு

விரைந்து = உடனே

ஒல்லை = சீக்கிரம். (இராமாயணத்தில் இராமன் மிதிலை வருகிறான். அந்த ஊரின் கோட்டை மேல் உள்ள கொடிகள் எல்லாம் இராமனை சீக்கிரம் சீக்கிரம் வா என்று அழைப்பது போல அசைந்ததாம்.

மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று  அழைப்பது போன்ற தம்மா")

கூகிற்றி யாகில் = நீ வரும்படி கூவினால்

அவனை நான் செய்வன காணே = நான் அவனை என்ன செய்வேன் என்று நீ காணலாம்





2 comments:

  1. என்ன ஒரு அன்னியோன்னியமான பாடல்! சொன்னதை விட சொல்லாததைப் பற்றி நம்மை என்ன வைத்து, மனதைக் குளிர்விக்கிறது.

    ReplyDelete
  2. என்ன ஒரு அன்னியோன்னியமான பாடல்! சொன்னதை விட சொல்லாததைப் பற்றி நம்மை எண்ண வைத்து, மனதைக் குளிர்விக்கிறது.

    ReplyDelete