Saturday, February 15, 2014

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்று

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்று



அவள்: போகணுமா ?

அவன்: ம்ம்ம்ம்...

அவள்: அப்புறம் எப்ப ?

அவன்: சட்டுன்னு வந்துர்றேன்....

அவள்: ம்ம்ம்...

அவன்: திரும்பி வர்ற வரை உன் ஞாபகமா ஏதாவது தாயேன்

அவள்: என்ன வேணும் ? என் கைக் குட்டை ? என்ன வேணும் ?

அவன்: உன் வளையல்ல ஒண்ணு தா...உன் ஞாபகம் வரும் போதெல்லாம் அதை பாத்துக்குறேன்....

அவன் முன்னே தன் இரண்டு கைகளையும்  நீட்டி "நீயே எடுத்துக்கோ " என்றாள் .

அவள் விரல்களைப் பிடித்து, மென்மையாக அவளின் ஒரு வளையலை அவன் எடுத்துச் சென்றான்.

போய் ரொம்ப நாள் ஒண்ணும் ஆகலை. இவளுக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

குயிலிடம் கொஞ்சுகிறாள் ..."ஏ குயிலே, இந்த காதல் அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை....நீ போய் ஒண்ணு அவனை வரச் சொல், இல்லைனா என்னோட வளையலையாவது வாங்கிட்டு வா ...எனக்கு இரண்டில ஒண்ணு வேணும் "


பாடல்

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.

சீர் பிரித்த பின்

பைங் கிளி வண்ணன் ஸ்ரீதரன் என்பதோர் பாசத்தில் அகப்பட்டு இருந்தேன்

பொங்கும் ஒளி வண்டு இறைக்கும் பொழில் வாழ் குயிலேகுறி கொண்டு இது  நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்

இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்.


பொருள் 


பைங் கிளி = பசுமையான கிளி

வண்ணன் = அதை போன்ற வண்ணம் உள்ளவன்

ஸ்ரீதரன் = வான் பேரு ஸ்ரீதரன்

என்பதோர் = என்ற அவனின்

பாசத்தில் அகப்பட்டு இருந்தேன் = காதலில் நான் அகப்பட்டுக் கொண்டேன்

பொங்கும் ஒளி = ஒளி பொருந்திய 

வண்டு இரைக்கும் = வண்டுகள் இரைச்சலாக சப்தமிடும்

பொழில் = இந்த சோலையில்

வாழ் குயிலே = வாழும் குயிலே

குறி கொண்டு = குறித்துக் கொண்டு, கவனமாக 


 இது  நீ கேள் = இதை நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் = சங்கையும் சக்கரத்தையும் உள்ள அவன்

வரக் கூவுதல் = வரும்படி கூவு , அது இல்லைனா

பொன்வளை கொண்டு தருதல் = என்னுடைய பொன்னால் ஆன வளையலை கொண்டு தரச் சொல்


இங்குள்ள காவினில் வாழக் கருதில் = இந்தக் காட்டில் நீ வாழ வேண்டும் என்றால்

இரண்டத்து ஒன்றேல் = இரண்டில் ஒன்று

திண்ணம் வேண்டும். = நிச்சயமாக வேண்டும்

அது என்ன, அவன் வேண்டும் இல்லை என்றால் என் வளையல் வேண்டும் என்ற கோரிக்கை?

அவளுக்கு சந்தேகம். ஒரு வேளை தன்னை அவன் மறந்திருப்பானோ என்று. அவனுக்கு இருக்கும் ஆயிரம்  வேலையில் தன்னை நினைக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது. எப்பவாவது ஞாபகம் வந்தால் என்னோட வளையலை எடுத்துப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வான்.

அந்த வளையலை திருப்பிக் கேட்டால்,

ஒன்று, "அடடா ...அவளை மறந்தே போயிட்டேனே " என்று என் நினைப்பு வந்து உடனே வருவான்

இல்லை என்றால், என் வளையலும் இல்லை என்றால் என் நினைப்பு வரும் போது என்ன செய்வான் ? என்னை பார்க்க நேரில் வந்து தானே ஆக வேண்டும் என்று  அவள் நினைக்கிறாள்.

அவனுக்காவது என் வளையல் இருக்கிறது ....எனக்கு என்ன இருக்கிறது ? அவனையே வரச் சொல்  என்கிறாள்.

இந்த காட்டில் வண்டுகளின் இரைச்சல் ரொம்ப இருக்கிறது. எனவே, குயிலே , நான் சொல்வதை கவனமாக குறித்துக் கொள் என்கிறாள். 

  

1 comment:

  1. என்ன ஒரு இனிமையான பாடல்! உன் முன்னுரை வசனம் (வழக்கம்போல்) அருமை! நான் முன்பே சொன்னது போல்: நீ சினிமாவுக்கு வசனம் எழுதப் போகலாம்.

    ReplyDelete