Wednesday, February 5, 2014

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர்

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர் 


சிலருக்கு நல்லது செய்தால் கூட அது நல்லது என்று தெரியாமல் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள்.

மருத்துவர் சொல்கிறார் ...உடற்பயிற்சி செய்யுங்கள், இனிப்பைத்  .தவிருங்கள் என்று. கேட்கிறோமா?

இல்லாத நோயெல்லாம் வாங்கிக் கொள்கிறோம்.

அதே போல, இறைவன் அருளை அள்ளித் அள்ளித் தருகிறான். அது வேண்டாம் என்று மறுத்து கண்டதன் பின்னே போகிறோம்.

நான் அப்படியே போனாலும், என்னை கை விட்டு விடாதே என்று இறைவனிடம்  கெஞ்சுகிறார்.

தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே. சிறியவர்கள் செய்த பிழை என்றாலும் பெரியவர்கள் பொறுப்பது இல்லையா.

மணிவாசகர் தன்னை நாய் என்று பல இடத்தில் தாழ்த்திச் சொல்லுவார்.

ஏன் நாய் என்று சொல்ல வேண்டும் ? வேறு ஏதாவது விலங்கை சொல்லலாமே ?

நாயிடம் ஒரு குணம் உண்டு.

வீட்டில் நன்றாக வளர்ப்பார்கள். அதை குளிப்பாட்டி, மருந்து பௌடர் போட்டு, வேளா வேளைக்கு உணவு தந்து பராமரிப்பார்கள். வீட்டில் யாரும் இல்லை என்றால், வெளியில் போய் வேறு எதையாவது தின்று விட்டு வரும்.

கெட்டதின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.

சட்டம், போலீஸ், நீதி மன்றம் என்று இல்லா விட்டால் நாமும் அப்படித்தான்  இருப்போம்.

நல்லதைத் தந்தாலும் அதை விட்டு விட்டு கெட்டதின் பின் போகும் புத்தி நாய் புத்தி.

பாடல்

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

பொருள் 

மறுத்தனன் யான் =வேண்டாம் என்று மறுத்தேன் யான்

உன் அருள் அறியாமையின் = உன்  அருளின் மகிமையை அறியாமல்

என் மணியே = என் கண்ணின் மணி போன்றவனே

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? = அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே

வினையின் தொகுதி = வினையின் மொத்த தொகுதிகளை . இந்தப் பிறவி மட்டும் அல்ல, முன் எத்தனையோ பிறவிகளில் செய்த வினைகளின் தொகுதி

ஒறுத்து = அறுத்து

எனை ஆண்டுகொள் = என்னை ஆண்டுகொள்

உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

பொறுப்பர் அன்றே பெரியோர = பெரியவர்கள் பொறுப்பார்கள் அல்லவா

சிறு நாய்கள் தம் பொய்யினையே? = சிறு நாய்கள் செய்யும் பிழைகளை



1 comment:

  1. பெரியவர்கள் பணிவார்கள் என்பதற்கு அத்தாட்சியாக, மணிவாசகர் தன்னை நாய் என்கிறார். நமக்கு எங்கே அவ்வளவு பணிவு வருகிறது?

    நல்ல உரைக்கு நன்றி.

    ReplyDelete