Monday, February 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா 


நம் புலன்கள் நம்மிலிருந்து வெளியே செல்வது மட்டும் அல்ல, வெளியில் இருப்பவற்றை உள்ளே இழுத்துக் கொண்டு வருகின்றன. நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பைப் போல புலன்கள் நம் மேல் சதா சர்வ காலமும் பற்றி ஏறி நம்மை காலி செய்கின்றன.

இந்த புலன்களால் என்ன செய்கிறோம் ?

இல்லாத பொய்களின் பின்னால்  போகிறோம்.உண்மையானவற்றை விட்டு விடுகிறோம்.

ஆசை. ஆசைப் பட்டதை அடைந்தவுடன் ஒரு ஆரவாரம். கிடைக்க வில்லை என்றால் சோகம். இப்படி புலன்களால் அலைகிறோம் .

அது மட்டும் அல்ல, இந்த புலன்கள் தப்பித் தவறி கூட நம்மை இறைவன் பக்கம் திருப்பாது. எப்போதும் சின்ன சின்ன சந்தோஷங்களின் பின்னேயே நம்மை விரட்டிக் கொண்டு இருக்கும்.


பாடல்


உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.


பொருள் 

உள்ளனவே நிற்க =  நிலையாக உள்ளவை ஒரு புறம் நிற்க

இல்லன செய்யும் = நிலை இல்லாதவற்றை செய்யும்

மையல் துழனி = ஆசை மற்று ஆரவாரம்

வெள்ளனலேனை = வெண்மை இல்லதாவனை. வெண்மை என்றால் தூய்மை. தூய்மை இல்லாதவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வியன் மாத் தடக் கைப் = பெரிய கை

பொள்ளல் = துளை உள்ள

நல் வேழத்து = நல்ல யானையின்

உரியாய் = தோலை உரித்து அதை உடையாக கொண்டவனே

புலன் = என் புலன்கள்

நின்கண் = உன்னிடம்

போதல் ஒட்டா = செல்வதற்கு விடாது

மெள்ளெனவே மொய்க்கும் = மெள்ள மெள்ள மொய்க்கும்

நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே = நெய்க் குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல

குடம்  பெரிது.எறும்பு  சின்னது.இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக எறும்புகள் குட நெய்யையும் காலி பண்ணி விடுவது போல புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை காலி செய்து விடுகின்றன.

நெய் குடம் பற்றி ஆழவார் பாடல் ஒன்று இந்த ப்ளாகில் இருக்கிறது. தேடிக் கண்டு பிடியுங்கள்.....






2 comments:

  1. I just found your blog and writings about thevaram and thiruvasagams and very excited to read all of them. Actually I was searching a song you might be knowing " natpathaththaar natpathame" can you help me who sang that and where I could find that song and I want to memorise and chant. Thank you

    ReplyDelete
  2. நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
    நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
    சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
    சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
    நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
    நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
    கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
    கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே

    இதுவா ?

    ReplyDelete